அத்தியாயம் 35
நாட்கள் அதன் போக்கில் சென்றன. விஜய் முற்றிலுமாக மாறிவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். மாறிவிட்டான் என்பதை விட, இப்போதுதான் அவன் வாழக் கற்றுக் கொண்டிருக்கிறான்.
மனைவி என்பவள் தன்னிடம் எதிர்பார்ப்பது பணம், நகை, சௌகரியம் அல்லது சொகுசு கிடையாது; கணவன் நெஞ்சில் தனக்கான காதல் மட்டும்தான் என்பதை அவன் உணர்ந்தான். பொது இடத்தில்
“என் பொண்டாட்டிகிட்ட இதெல்லாம் வச்சுக்காதீங்க” என்று சொல்லும் அந்த உரிமைக்குரல் போதும், கொண்டவன் துணை இருந்தால் கூரை மேல் ஏறி நின்று கூவி ஆடலாம் என்பார்கள்; அதைத்தான் அஞ்சலி இப்போது செய்து கொண்டிருக்கிறாள்.
குடும்பத்தார்கள் ஆரம்பத்திலேயே இப்படி இருந்திருந்தால் இந்நேரம் வாழ்க்கை இன்னும் நன்றாக இருந்திருக்கும். சரி, இவர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று விதி இருந்தால் யாரால் மாற்ற முடியும்? மேலும், அஞ்சலி மீண்டும் கர்ப்பம் என்ற செய்தி வந்தவுடன் குடும்பத்தார்களுக்கு மகிழ்ச்சி இன்னும் அதிகமாகிவிட்டது.
கணவனோடு வேலைக்குச் செல்வதும், மாலையில் அவனோடே வருவதுமாக அஞ்சலியின் நாட்கள் நகர்ந்தன. மகனையும் கையோடு அழைத்துச் சென்று விடுவார்கள். அடுத்த வருடத்திலிருந்து அவனைப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதுதான் இவர்களுக்கு இப்போது பெரும் கவலையாகிவிட்டது. இதற்கு நடுவில் மாதந்தோறும் பரிசோதனைகள் என ஒரு சாதாரண வீட்டில் நடக்கும் அன்றாட விஷயங்களோடு அவர்கள் வாழ்க்கை இனிமையாகச் சென்றது. இதற்கிடையில் சுவாதியும் அடுத்த மாதமே கர்ப்பமானாள்.
“இவ்வளவு சீக்கிரம் பிரக்னண்ட்டா? ஃபர்ஸ்ட் இயர் வெட்டிங் அனிவர்சரி அப்போ கையில குழந்தையோட இருந்தா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. எல்லாம் உங்களால தான்” என்று வெட்கப்பட்டு ரித்திக் மீது சாய்ந்து கொள்வாள் சுவாதி.
அங்கிருக்கும் மூத்த பெண்மணிகளும் பிள்ளைகளும் அவளுக்குத் துணையாக இருந்தனர். “இவ்வளவு சீக்கிரம் குழந்தை என்று கவலைப்படாதே; இத்தனை வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்று எத்தனையோ பெற்றோர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பிள்ளை வரம் என்பது தெய்வம் கொடுப்பது, அதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்” என்று அவர்கள் அறிவுரை கூறினர். அந்த மூத்த பெண்மணிகளின் ஆலோசனைப்படி சுவாதி தனது கர்ப்ப காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள். வாரம் ஒருமுறை விஜய் வீட்டிற்கு வந்து செல்வது இவர்களது வழக்கமான பொழுதுபோக்காக இருந்தது.
வினோவர்மன் வயிற்றில் இருக்கும் பொழுது அஞ்சலிக்குச் சீமந்த விழா செய்ய முடியாமல் போனதால், இந்த முறை அவளுக்குச் சிறப்பாகச் செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தனர். ஒன்பதாம் மாதத்தில் ஊரையே கூட்டி மிகவும் பிரம்மாண்டமாகச் சீமந்த ஏற்பாடுகளைச் செய்தனர்.
உறவினர்கள் அனைவரும் வந்து அவளை வாழ்த்திச் சென்றனர். ஏழு மாத கர்ப்பிணியாகச் சுவாதி அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்க, அவள் பின்னாடியே வால் பிடித்த குரங்கு போல ஜூஸ் மற்றும் பழங்களோடு ரித்திக் சுற்றிக் கொண்டிருந்தான்.
அனைவரும் நலங்கு வைத்து முடித்த பிறகு, தன்னவன் இன்னும் வைக்கவில்லையே என்று அஞ்சலி ஏக்கத்தோடு விஜயைப் பார்த்தாள். இறுதியாக வந்த விஜய், அவள் முன்னால் முழங்கால் போட்டு அமர்ந்து, அவள் பாதங்களுக்கு முத்தமிட்டு, ஒரு வெள்ளிக் கொலுசை அணிவித்தான். அதைப் பார்த்ததும் அஞ்சலிக்குக் கண்ணீர் வந்தது. இதுவரை அவள் கொலுசே அணிந்ததில்லை, அதுதான் அவளது குடும்பத்தில் ஒரு மிகப்பெரிய பேச்சாக இருந்தது.
அவளுக்குச் சிறுவயதிலிருந்தே கொலுசு பிடிக்காது என்பதெல்லாம் இல்லை. எட்டு வயது வரை அணிந்தவள்தான். ஒருநாள் ஒரு தெலுங்கு சினிமாவில், கதாநாயகன் ஆசையாக நாயகிக்குக் கொலுசு அணிவித்து அவள் காலில் முத்தமிடும் காட்சியப் பார்த்த பிறகு, அவள் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.
தன் நாயகன் தனக்கு அணிவிக்கும் போதுதான் கொலுசு அணிந்து கொள்ள வேண்டும் என்று அன்று கழற்றி வைத்தவள்தான். அந்த ரகசியத்தைச் சுவாதி மூலம் விஜய்க்குத் தெரியப்படுத்த, அதைத் தக்க சமயத்தில் செயல்படுத்தக் காத்திருந்து இப்போது அவள் காலில் அழகாக அணிவித்தான். பின்னர் கன்னத்தில் சந்தனம், மஞ்சள் பூசி, நெற்றியில் குங்குமம் வைத்து மனைவியைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
அனைவரும் இந்தத் தருணத்தைச் சந்தோஷமாக ரசித்துக் கொண்டிருக்க, அஞ்சலியின் அப்பா சீனிவாசன் திருஷ்டி போலத் தன் குடும்பத்தோடு வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்ததும் அனைவருக்கும் தர்மசங்கடமாக இருந்தது. விஜய் மீண்டும் கோபப்பட்டுப் பிரச்சனையாகி விடுமோ என்று பயந்தனர். ஆனால் விஜய் சீனிவாசனைப் பார்த்து, “என்ன மாமா அங்கேயே இருக்கீங்க? உள்ள வாங்க” என்று சாதாரணமாக வரவேற்றான். அவர் நிம்மதியாகத் தன் குடும்பத்தோடு உள்ளே வந்தார். அஞ்சலி தன் அப்பாவை எழுந்து நின்று வரவேற்க, அவர் மகளைக் கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.
“நான் பண்ண தப்புக்குக் கடவுள் உன்னை என்கிட்ட இருந்து பிரிக்கப் பார்த்தார். உங்க அம்மாவை என் கூட வாழ விடாமல் பண்ணிட்டார். ஆனா அப்பான்னு ஒரு கடமை இருக்குல்ல? என்னோட மூத்த மகள் நீ, உனக்குச் செய்ய வேண்டியது அப்பாவோட கடமை மட்டும் இல்ல, அது உனக்கான உரிமை”
என்று சொல்லித் தன் மனைவியிடம் ஜாடை காட்டினார். அவர் தாம்பூல தட்டில் அஞ்சலிக்கு பட்டுப்புடவை மற்றும் நகைகளையும், விஜய் மற்றும் மகனுக்குப் புத்தாடைகள், நகைகளையும் கொடுத்துத் தன் அன்பைச் செலுத்தினார். அஞ்சலி அதை ஒரு சிறு புன்னகையோடு பெற்றுக் கொண்டாள். தன் அம்மாவைக் கணவர் கைவிட்ட வலி அவளுக்குள் இன்னும் இருந்தாலும், தன் தந்தையின் மாற்றத்தை ஏற்றுக்கொண்டாள். சீனிவாசனின் மற்ற இரு பிள்ளைகளும் அஞ்சலியிடம் வந்து “அக்கா” என்று அறிமுகமாகிக் கொள்ள, அவளும் மகிழ்ச்சியோடு அவர்கள் கன்னத்தைக் கிள்ளினாள்.
விழா முடிந்து அனைவரும் விருந்துண்டு புகழாரம் சூட்டிச் சென்றனர். சீனிவாசனும் சற்று நேரம் இருந்துவிட்டுச் சென்றார். அஞ்சலி அவரிடம் தந்தை என்ற மரியாதையை மட்டுமே காட்டினாள். அவரும் அதை உணர்ந்து நாசுக்காகச் சற்று விலகியே தன் பாசத்தைக் கொட்டிச் சென்றார். இதற்குப் பெயர்தான் பக்குவம்.
மூன்று வருடங்களுக்கு முன்பு இதே சீனிவாசன் வந்திருந்தால் விஜய் ஆத்திரப்பட்டிருப்பான்; ஆனால் இப்போது பொறுமையாகத் தலைவணங்கி மரியாதை செலுத்துகிறான். எல்லாம் நேரம்தான்.
நடுஇரவில் உறக்கம் வராமல் தன் வயிற்றைத் தடவிக் கொண்டு அங்கும் இங்கும் உலாத்திக் கொண்டிருந்தாள் சுவாதி. இதற்கு ‘மூட் ஸ்விங்’ (Mood swing) என்று பெயர் வைத்துவிட்டனர். டாக்டர்கள் சொன்னதால் ரித்திக் அவள் என்ன செய்தாலும் பொறுமையாக ஏற்றுக்கொண்டான். சில நேரம் நன்றாக இருப்பாள், சில நேரம் எரிந்து விழுவாள், சில நேரம் அழுது கொண்டிருப்பாள். அது ஒரு சுகமான அவஸ்தை அவனுக்கு.
“உன்னை இவ்வளவு டார்ச்சர் பண்றேன், பாவம் நீ… எதுக்கு என் கூட வாழணும்?” என்று சில நேரம் சுவாதி அழுது கொண்டே கேட்பாள். அதற்கு ரித்திக் முத்தத்தைப் பரிசளித்து அவளைக் கட்டிக் கொள்வான். “உன் முகரைக்கட்டைக்கு நானே பெருசு, இதுல இன்னொரு பொண்டாட்டி வேற கேக்குதா?” என்று அவளே மீண்டும் கிண்டல் செய்வாள்.
இங்கே அஞ்சலி அமைதியாகத் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கணவனோடு வேலைக்குச் செல்வதும், குழந்தையோடு விளையாடுவதுமாக அவளுக்குப் பிரசவ காலம் பெரிய கஷ்டமாகத் தெரியவில்லை. இரண்டாவது பிரசவம் என்பதால் அவளுக்குப் போதிய மனப்பக்குவம் இருந்தது.
“மணி 12 ஆகப் போகுது, இன்னும் எதுக்கு முழிச்சிட்டு இருக்க?” என்று விஜய் கேட்க, அஞ்சலி சற்றுப் பதற்றமாக, “இன்னும் ரெண்டு நாள்ல ஆபரேஷன், அதான் கொஞ்சம் பயமா இருக்கு” என்றாள். “பரிசோதனையில் சிசேரியன் என்று முன்னாடியே சொல்லிட்டாங்க இல்ல? நீ டென்ஷன் ஆகாதே” என்று விஜய் அவளுக்குச் சமாதானம் சொல்லி, வீங்கிய அவள் பாதங்களுக்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தான். அப்போது சட்டென்று பனிக்கொடம் உடைய, அஞ்சலி சாதாரணமாக, “அதான் சொன்ன டேட்டுக்கு உன் புள்ளைங்க எப்போ பிறந்திருக்காங்க? வினோவும் அப்படித்தான் டெலிவரி டேட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்தான். இவளும் அப்படித்தான் பண்றா. பயப்படாதே, இது கொஞ்சம் கொஞ்சமா தான் நீர் வெளியேறும், அதுக்குள்ள ஹாஸ்பிட்டல் போலாம்” என்று அவளே தைரியம் சொல்லி அவனை அழைத்துச் சென்றாள்.
வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அவசர அவசரமாகக் கிளம்பினர். விஜய் கார் ஓட்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் செழியன் கார் ஓட்டினான். பத்து நிமிடத்தில் மருத்துவமனைக்குச் சென்றனர். அஞ்சலிக்குத் தேவையான ஃபார்மாலிட்டிகளை முடித்து அவளை வீல் சேரில் அழைத்துச் சென்றனர். விஜய் பிரம்மை பிடித்தது போல் பின்னாடியே செல்ல, இசை மற்றும் அம்பை அவனைப் பிடித்துக் கொண்டனர். செழியன் அண்ணனாகத் தன் கடமையைச் செய்ய உடன் சென்றான்.
ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே விஜய் கை நடுங்கக் கையெழுத்துப் போட்டான். அவனது அக்கா அம்பை அவனிடம் ஒரு வீடியோவைக் காண்பித்தார். அதில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும் போது ஒரு பெண் அனுபவிக்கும் வலி, வேதனை மற்றும் அந்தத் தையலோடு அவள் படும் கஷ்டங்கள் அனைத்தும் இருந்தன. “சுகப்பிரசவத்தில் பிறந்தால்தான் பிணைப்பு இருக்கும் என்று தவறாகப் பேசுபவர்களுக்கு இதெல்லாம் புரிவதில்லை. வயிற்றைக் கிழித்துப் பெற்றுக் கொள்ளும் தாய்க்கும் குழந்தைக்குமான பிணைப்பு அதிகமானதுதான்” என்று அவர் விளக்கினார். இதைக் கேட்ட விஜய், தன் மனைவியை இன்னும் எவ்வளவு அன்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டான்.
அரை மணி நேரத்தில், விஜய்யைப் போலவே உரித்து வைத்திருந்த ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவர் கைகளில் கொடுத்தபோது கை நடுங்க வாங்கிக் கொண்டவன், மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். 20 நிமிடங்களுக்குப் பிறகு அஞ்சலி வார்டுக்கு மாற்றப்பட்டாள். விஜய் அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டான். இரவு நேரம் என்பதால் அம்பையும் செழியனும் வீட்டிற்குச் சென்றனர்.
ஆபரேஷன் முடிந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அஞ்சலி வலியால் அவதிப்பட்டாள். அருகில் குழந்தையின் சலசலப்பு கேட்க, பால் கொடுக்க இசை உதவ வந்தபோது, விஜய்யே குழந்தையை எடுத்து அஞ்சலியிடம் கொடுத்து உதவினான். அஞ்சலி கண்களை மூடிச் சிரித்துக் கொண்டே குழந்தைக்குப் பால் புகட்டினாள். அதைப் பார்த்த விஜய்க்குத் தானாகக் கண்ணீர் வழிந்தது.
ஒன்றரை நாட்கள் கழித்து அஞ்சலி தெளிவாகக் கண் விழித்தாள். அவளை அமர வைத்து மகளைக் கையில் கொடுத்தபோது அவள் மகிழ்ச்சியோடு முத்தமிட்டாள். விஜய் அவள் கையைப் பிடித்துக் கொண்டு மௌனமாக இருந்தான். அவனால் எதுவும் பேச முடியவில்லை; அவனது பார்வையே அவன் காதலைச் சொல்லியது. மருத்துவர் பரிசோதனை நேரத்தின் போது விஜய் இருவருக்கும் உணவு வாங்கி வர வீட்டிற்குச் சென்றான். இசை அஞ்சலியோடு பேசிக் கொண்டிருந்தாள்.
“சந்தோஷமா இருக்கேன் அஞ்சலி, உன்னையும் விஜய்யையும் இப்படிப் பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு” என்று இசை சொன்னாள்.
“நானும் தப்பு பண்ணிட்டேன் அக்கா. அந்த வயசுல காதல்னா நான் மட்டும் தான் அப்படின்னு ஒரு பிடிவாதம் இருந்தது, ஆனா பொறுமை இல்லை. யாரோ வத்தி வச்சிட்டுப் போனதுக்காக என் புருஷன் கூடச் சண்டை போட்டு ரெண்டு வருஷத்தை வீண் பண்ணிட்டேன். இப்போ பாருங்க, எந்தப் பிரச்சனையும் இல்லாத மாதிரி வாழ்ந்துட்டு இருக்கோம். இப்படியே காலத்தைக் கடக்கணும்” என்று அஞ்சலி எதார்த்தமாகப் பேசினாள்.
மாலையில் விஜய் உணவோடு வந்து சேர்ந்தான். குழந்தையை அவனே பார்த்துக் கொண்டான். இசை கணவன் – மனைவிக்கு இடைஞ்சல் இல்லாமல் அருகிலிருந்த சிறிய பெட்டில் அமர்ந்து மொபைலில் பேசிக் கொண்டிருந்தாள். விஜய் மெதுவாக அஞ்சலியின் காதருகே வந்து, “ஐ லவ் யூ” என்றான்.
அஞ்சலிக்குத் தூக்கிவாரிப் போட்டது. “இது என்ன என் புருஷன் வாயில் இருந்து வராத புது மொழியாக இருக்கிறது?” என்று அவள் திரும்பிப் பார்க்க, அவன் குழந்தைக்குப் போர்வை போர்த்துவது போல் பாவ்லா செய்தான். ஒருவேளை தனக்குத் தவறாகக் கேட்டுவிட்டதோ என்று அஞ்சலி தன் மொபைலை எடுத்துப் பார்க்கத் தொடங்கினாள்.
“உனக்குக் கேட்கலையா? நான்தான் ‘ஐ லவ் யூ’ சொன்னேன்” என்று மீண்டும் அவள் காதருகே வந்து சொன்னான். அஞ்சலியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. இதுவரை அவன் இவ்வளவு ஆத்மார்த்தமாகச் சொன்னதில்லை. “விஜய்…” என்று அவள் இதழ் துடிக்க அவனைப் பார்த்தாள்.
அவன் கண்கள் நிறைந்த காதலோடு அவள் இதழைச் சிறை செய்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே தங்கள் காதலைப் பரிமாறிக் கொண்டனர். அந்த மோகப் பார்வை இருவருக்கும் ஒரு புதிய தொடக்கத்தைத் தந்தது.
எபிலாக்
ஐந்து வருடங்கள் கழித்து…
“யுவஸ்ரீ, இப்ப நீ அமைதியா இல்லனா உனக்கு அடி விழும்!” என்று தன் ஐந்து வயது மகளை விரட்டிக் கொண்டிருந்தாள் சுவாதி. பெண் பிள்ளைதான் மூத்தவளாகப் பிறந்தாள். பிறந்தவுடன் கணவனின் தங்கை மற்றும் தன் உற்ற தோழியின் பெயரையே மகளுக்குச் சூட்டிவிட, ரித்திக்கிற்கு ஏக மகிழ்ச்சி. அந்த இல்லத்தில் இருக்கும் குழந்தைகளோடும், பெரியவர்களோடும் உறவோடு உறவாக யுவஸ்ரீ கலந்துவிட, அவர்களுக்கு அவள் செல்லப் பிள்ளையாகிப் போனாள்.
இப்பொழுது ரித்திக் – சுவாதி இருவரும் ‘சுவாதி பவனம்’ என்கிற மிகப்பெரிய எஸ்டேட்டின் சொந்தக்காரர்கள் ஆகிவிட்டார்கள். அங்கே இரண்டு தொழிற்சாலைகள் உள்ளன; தங்கள் இல்லத்தில் (Home) இருக்கும் வேலையற்ற இளைஞர்களும் பெண்களும் அங்கே வேலை செய்கிறார்கள். பெரியவர்கள் மேற்பார்வையாளர்களாக இருக்கிறார்கள். சம்பாதிக்கும் பணத்தை அப்படியே தங்கள் இல்லத்தின் செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, தங்களுக்கும் போதுமானதை எடுத்துக்கொள்கிறார்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு இவர்களே மேட்ரிமோனி மூலம் வரன் பார்த்து, சீர் கொடுத்துத் திருமணம் செய்து வைத்துச் செட்டில் பண்ணிவிடுகிறார்கள். ஒரு நிறைவான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சுவாதிக்குச் சாதாரணப் பிரசவம் (Normal Delivery) தான் நடந்தது. அவள் வலியில் துடித்த துடிப்பைப் பார்த்து, “ஒரு பிள்ளையே போதுமடா சாமி” என்று ரித்திக் முடிவெடுத்துவிட, அவளும் மற்ற பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் ஒரு பெண் பிள்ளையுடன் நிறுத்திக் கொண்டாள்.
இங்கே அஞ்சலிக்கு மூன்றாவதாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருந்தது. ஆனால், மகள் பிறந்து அஞ்சலி டிஸ்சார்ஜ் ஆன மூன்றாவது நாளே, விஜய் சுயமாக முன்வந்து குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டான். “இனி பிள்ளை பிறக்க வாய்ப்பே இல்லை” என்று அவன் சொன்னது அனைவருக்கும் சற்று சோகமாக இருந்தாலும், எப்போதும் பெண்கள் மட்டும்தான் செய்துகொள்ள வேண்டுமா என்ன? ஆண்களும் செய்துகொள்ளலாம் என்பதற்கு உதாரணமாக விஜய் திகழ்ந்தான்.
இன்று யுவஸ்ரீக்கு ஐந்தாவது பிறந்தநாள். அனைவரும் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர். விஜய் – அஞ்சலி தங்களது ஏழு வயது மகன் வினோ வர்மன் மற்றும் ஐந்து வயது மகள் வினிதாவுடன் வந்தனர். இனியன் – இசை, செழியன் – அம்பை, ராம் – யோகிதா என அனைவரும் தங்கள் பிள்ளைகள் மற்றும் பெரியவர்களோடு சூழ, அங்கே இருக்கும் பிள்ளைகள் மற்றும் பெரியவர்களின் ஆசீர்வாதத்தோடு யுவஸ்ரீயின் பிறந்தநாள் இனிதாகக் கொண்டாடப்பட்டது.
குரூப் போட்டோ எடுப்பதற்காக அனைவரும் குழு குழுவாகப் பிரிந்து எடுத்துக் கொண்டனர். பிறகு விஜய் குடும்பத்தோடு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று அனைவருக்கும் நாற்காலி போட்டு, ஜோடி ஜோடிகளாக அமர வைத்தனர். அவர்களுக்குப் பின்னால் பிள்ளைகள் நிற்க, அஞ்சலி – விஜய் மடியில் தங்கள் பிள்ளைகளுடனும், ரித்திக் – சுவாதி அவர்களது ஒற்றை மகளுடனும், மற்ற ஜோடிகளும் அவர்கள் பிள்ளைகளுடனும் சிரித்தபடி போஸ் கொடுத்தனர். புகைப்படக் கலைஞர் அந்த அழகான தருணத்தைப் புகைப்படமாக எடுத்து முடித்தார்.
,,,,,,
இந்தக் கதையில் ஆஹா ஓஹோ என்று சொல்வதற்கு ஒன்றும் கிடையாது; இது நாம் நாமே உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம். ஏற்கனவே காதல் முறிவு (Break-up) ஆனவர்களைத் திருமணம் செய்து கொள்கிறவர்களுக்கு இது புரியும்.
ஏற்கனவே ஒரு காதலைக் கடந்தவர்களைத் திருமணம் செய்வதில் நன்மைகளை விடச் சவால்கள் (Disadvantages) நிறையவே இருக்கும். அது அவர்களைத் திருமணம் செய்யும் பார்ட்னருக்குத்தான் தெரியும். “அவர்கள் இன்னும் பழைய நினைவிலேயே இருக்கிறார்களா, அப்போ நமக்கு இடமில்லையா?” என்ற சந்தேகத்துடனேயே வாழ ஆரம்பித்தால் வாழ்க்கை கசந்துவிடும். “நடந்தது கடந்த காலம், இப்போது நான் தான் உன் வாழ்க்கை” என்று உங்கள் உரிமையை நிலைநாட்டி, அவர்களை உங்கள் பக்கம் திசை திருப்பினால்தான் அவர்களும் உங்கள் மீது கவனம் செலுத்த முடியும். இது நிஜ வாழ்க்கையில் பலருக்கு நடக்கும் விஷயம். ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து, கற்பனை கலந்து உங்களுக்காகக் கொடுக்கப்பட்ட கதைதான் இது.
கதை பிடித்திருக்கிறதா என்று சொல்லிவிட்டுப் போங்கள்.
நன்றி.