Home ANTIHERO15) பார்வை 😍

15) பார்வை 😍

by sreejanovels
4 views

அத்தியாயம் 15

கணவன் மனைவி இருவரும் உலகை மறந்து தங்களுக்குள் ஒருவருக்குள் ஒருவராகக் கலந்து இருக்க, ஆனால் விதி இவர்களைச் சந்தோஷமாக இருக்க விடுமா? தன் கணவன் தனக்காக வந்திருக்கிறானே என்ற மகிழ்ச்சியில் தன்னை அர்ப்பணிக்க, இவளை இனி விடக்கூடாது, இவளை இப்படியே தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவன் நினைத்திருக்க… ஆனால் ஏழரை நாட்டுச் சனி அவன் வாயில் தாண்டவம் ஆடியது அவனுக்குத் தெரியாது போல! உணர்ச்சி வேகத்தில் உச்சமடையும் பொழுது, சரியாக அவள் காதோரம் முத்தமிட்டு “லவ் யூ வினு” என்று சொல்லிவிட்டான்.

அவ்வளவுதான்! இவ்வளவு நேரம் மோகக் களியாட்டத்தில் ஆடிய அவளுக்கு அவன் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை சப்தநாடியையும் அடக்கிவிட்டது. அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டுக் கோபமாகப் பார்த்தாள். மோகம் தடைப்பட்ட நிலையில் அவன் அவளைப் பார்க்க, அவன் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. பாவம், ஏற்கனவே வெள்ளை தேகம் கொண்டவன், அவள் அடித்த அடியில் கன்னம் சிவந்து பழுத்துக் கிடந்தது. அவனால் எதுவும் பேச முடியவில்லை, கன்னத்தில் கை வைத்துக்கொண்டு அவளையே பார்த்தான்.

“நீ திருந்தவே மாட்டடா! எப்படியெல்லாம் பேசிப் பேசி என்னை எடுத்துக்கிட்ட… உன்னை நம்பித்தானே மறுபடியும் என்னை உனக்குக் கொடுத்தேன்? இப்பவும் நான் ஏமாந்து போயித்தான் நிற்கிறேன். எவளையோ நினைச்சுக்கிட்டு என்கூடப் படுக்க வந்தியா? இன்னொரு தடவை இந்த நினைப்போட வந்தே, செருப்பு பிஞ்சுடும்! போடா, என் முகத்துல முழிக்காதே” என்று அவள் சத்தம் போட, அவளை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே தன் உடைகளை மாற்றிக்கொண்டான். இவள் குளியலறைக்குச் சென்று வேறு உடை மாற்றிக்கொண்டு வந்தாள்.

கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, ‘கணவன் மனைவி சேர்ந்து விடுவார்கள், இனி அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்’ என்ற நம்பிக்கையில் சுவாதியும் ரித்திக்கும் வெளியே வந்தனர். அங்கே விஜய் எதையோ இழந்தது போல் வெளியே வந்தான். அஞ்சலி கோபமாக வெளியே வந்து, “இன்னொரு தடவை இவன் இந்த வீட்டுக்குள்ள வந்தா, நான் உயிரோடவே இருக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டுத் தன் குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

ரித்திக் மற்றும் சுவாதி இருவரும் இது என்னடா கதை என்பது போல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அரைகுறை உறக்கத்தில் இருந்த குழந்தை, அப்பாவைப் பார்த்தவுடன் சிரித்தது. ஏனோ விஜய்க்கு அந்தச் சிரிப்பு ஆழ்மனதைத் தொட்டது. உள்ளே சென்ற கீதாஞ்சலியைப் பிடித்து இழுத்தவன், தன் மகனை வெறித்தனமாக வாங்கிக் கொண்டான்.

“அசிங்கம் பிடித்தவனே! குளிச்சுட்டு வந்து தொட்டாலும் பரவாயில்லை, இப்படியே வந்து குழந்தையைத் தூக்காதே, இன்பெக்ஷன் (Infection) ஆகும்” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படிச் சொன்னாள். “மத்தவங்க தொட்டாதான் தப்பு, பெத்த அப்பன் தொட்டா தோஷம் கிடையாது. குடுடி என் குழந்தையை” என்று மகனை வாங்கிக் கொண்டான். அப்பாவைப் பார்த்து ஒரு சிரிப்போடு குழந்தை அவன் தோளில் முகத்தை வைத்துத் தேய்த்தது.

“அஞ்சலி, எதுக்கு இவ்வளவு சத்தம் போடுற? கொஞ்சம் பொறுமையா பேசலாம்ல” என்று ரித்திக் தயக்கத்தோடு கேட்க, அவர்கள் இருவரும் தர்மசங்கடத்தில் இருப்பது புரிந்துபோன அஞ்சலி சிரித்துக்கொண்டே சொன்னாள்:

“என்ன நினைச்சீங்க? புருஷன் பொண்டாட்டி உள்ள போயிருக்காங்க, கண்டிப்பாச் சமாதானமாகி ஒன்னு சேர்ந்திருப்பாங்கன்னு நினைச்சீங்க இல்ல? ஒன்னு சேர்ந்தோம், ஆனா சமாதானம் ஆகல. அவர் தன்னுடைய இச்சையை என்கிட்ட தீர்க்க வந்துருக்காரு. அவரோட முன்னாள் மனைவி வினுஷாவோட ஞாபகம் வந்துடுச்சு. வேற யார்கூடப் போனா கேவலமான பேர் வரும்னு, பொண்டாட்டி இங்க இருக்காளே, இவ இளிச்சவாய் அப்படின்னு தன்னுடைய தேவையைத் தீர்த்துக்க வந்தாரே தவிர, என்கூட வாழறதுக்காக வரல. இப்படிப்பட்ட ஒருவனுக்குக் கழுத்தை நீட்டியதை நினைச்சா எனக்கு நானே நெருப்பு வச்சுக்கிட்டாலும் தகும்.”

கோபமாக அவள் பேச, விஜய் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு தன் மகனை அழுத்தமாகக் கட்டிப்பிடித்துக்கொண்டான். அவன் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் எட்டிப்பார்த்தது, ஆனால் அதை யாரும் கவனிக்கவில்லை. விஜய் செய்தது தவறாகவே இருந்தது.

“என்னடி சொல்ற? என்னென்னமோ சொல்ற” என்று சுவாதி பயந்துகொண்டே கேட்க, சுவாதியைக் கட்டிப்பிடித்து அஞ்சலி அழத் தொடங்கினாள். ‘இதற்குமேல் இங்கே இருந்தால் சரியாக இருக்காது’ என்று கருதிய விஜய், குழந்தையைச் சுவாதியிடம் கொடுத்துவிட்டு, அஞ்சலியை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றான். ரித்திக் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.

“இப்ப எதுக்கு அஞ்சலி அழுதுகிட்டு இருக்க? கொஞ்ச நேரம் அமைதியா இரு, என்ன நடந்ததுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல” என்று சுவாதி கேட்க, “நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லடி. இன்னும் மோசமான நிலைமையில் அவர் இருக்கிறார். இன்னும் அவங்களை மறக்கல. என்கூட வாழக் கஷ்டப்படுறார், ஆனா நான் இல்லாம அவரால இருக்க முடியல. புருஷன்கிட்ட தனக்கான காதலைத் தேடுறது பெரிய பாவமா இருக்குடி” என்று தேம்பி அழுதாள் அஞ்சலி.

சுவாதி அவளைச் சமாதானம் செய்தாள், “சரி சரி, நீ இப்படி அழறதைப் பார்த்துப் பையன் கூடப் பயப்படுறான். வா அவனுக்குச் சாப்பாடு வச்சுட்டு நாம சாப்பிடலாம். நாம எதற்கும் அலட்டிக்கத் தேவையில்லை, என்ன நடக்கணுமோ அது தானாக நடக்கும்.”


இங்கே விஜய் நேராக ஒரு பாருக்குச் சென்றான். அது பணக்காரர்களுக்கான பிரத்தியேகமான ஏசி அறை கொண்ட பார். அதில் ஒரு பாட்டில் மதுவை எடுத்துத் தன் வாயில் ஊற்றிக் கொண்டிருக்க, ரித்திக் அங்கு வந்தான்.

“டேய் மெண்டல்! என்னடா பண்ணிக்கிட்டு இருக்க? இப்படி குடிச்சா உன் குடல் கெட்டுப் போயிடாதா?” என்று ரித்திக் தடுத்தும் அவன் கேட்கவில்லை. “டேய் இப்ப நிறுத்தப் போறியா இல்லையா? பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப ஒன்னும் தெரியாதவன் மாதிரி குடிச்சு சிம்பதி (Sympathy) கிரியேட் பண்றது இந்த ஆம்பளைங்களுக்குக் கைவந்த கலை. அந்தப் பொண்ணு எதிர்பார்த்தது உன்னோட காதல். உன்னோட பணத்துக்கு ஆசைப்பட்டு ஆயிரம் பேர் வருவாங்க, ஆனா உன் மனசுக்கு ஆசைப்பட்டு வந்தது அஞ்சலி மட்டும்தான். உன்னோட முன்னாள் மனைவியோட இதயம் அந்தப் பொண்ணுக்குப் பொருத்தப்பட்டதால்தான் உன் ஈர்ப்பு ஆரம்பத்துல இருந்தது. அவங்க அப்பா உன்னைத் தொல்லை பண்ண நினைச்சார், ஆனா அவரே இப்ப உயிரோட இல்லைன்னு தகவல் வருது. அஞ்சலி இதைப் பத்தி யாரிடமும் சொல்லல. புருஷன் நம்மளைப் பார்த்துப்பான்னு நம்பி வந்தா, நீ அவளை என்ன பண்ணி வச்சிருக்க?”

ரித்திக் தொடர்ந்து பேசினான், “பழைய விஷயத்தை நினைச்சுக்கிட்டு கையில் இருக்குற பொக்கிஷத்தைத் தொலைக்காதே. இப்ப அவ மட்டும் இல்ல, உன்னோட குழந்தையும் இருக்கு. அதோட வருங்காலத்தை நினைச்சுப் பார்” என்று சொல்லிவிட்டுச் செல்ல, விஜய் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சு விட்டான். அப்போது அஞ்சலி அவன் வாழ்க்கையில் வந்த நினைவுகள் அவன் கண்முன்னே வந்து சென்றன.


வீட்டில் பெண்கள் இருவரும் சாப்பிட்டு முடித்து உறங்கும் போது, நீண்ட நேரமாகக் குழந்தைக்குப் பால் கொடுக்காததால் குழந்தை அழ ஆரம்பித்தது. அஞ்சலி குழந்தையைச் சாய்ந்து வைத்துப் பால் கொடுக்க முயன்றாள், ஆனால் பால் வரவில்லை. குழந்தை இன்னும் அழ ஆரம்பித்தது.

“என்னடி, நைட்டு டைம்ல சோட்டுக்கு நீதானே ஃபீட் (Feed) பண்ற? இதுவரைக்கும் அவன் பால் குடிக்கும் போது அழுததே கிடையாதே! என்ன ஆச்சு?” என்று சுவாதி சந்தேகமாகக் கேட்டாள். “இல்லடி, பால் வரவே இல்லை” என்று சங்கடமாகச் சொன்னாள் அஞ்சலி.

“ஏண்டி நானும் வீட்டுக்கு வந்ததிலிருந்து குழந்தைக்கு நீ பால் கொடுக்கவே இல்லையே, குழந்தைக்குக் கொடுக்காமல் வேற யாரு குடிச்சா?” என்று சுவாதி கேட்கும் போதுதான் விஜய் வந்து சென்றது அவளுக்கு ஞாபகம் வந்தது. சந்தேகமாக அஞ்சலியைப் பார்க்க, அவள் கண்ணீரோடு தலை குனிந்தாள்.

“சரி சரி, எமர்ஜென்சிக்கு ஃபார்முலா மில்க் (Formula milk) இருக்குல்ல, நான் ரெடி பண்ணிட்டு வர்றேன், நீ அவனைச் சமாதானம் பண்ணு” என்று சுவாதி அங்கிருந்து சென்றாள். கணவன் மனைவி உலகை மறந்து இருந்த போது, அவன் அவளை அள்ளி அணைத்து முத்தமிட்டு அமுதம் பருகிய இடம் அதுதானே! அவனோடு இணைந்து விட்டதை அவளால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

சுவாதி பால் கலந்து வந்து கொடுக்க, அதை மகனுக்கு ஊட்டிவிட்டபடி, விஜய் என்ற ஒருவன் தன் வாழ்க்கையில் எப்படி வந்தான் என்று அஞ்சலி நினைக்கத் தொடங்கினாள்.


You may also like

Leave a Comment

About Me

Featured