அத்தியாயம் 22
மேம்பாலத்தின் அந்தப் போர்க்களத்திலிருந்து அக்னி தனது குடும்பத்தை மீட்டெடுத்த வினாடி, அவனது கண்கள் மனிதத்தையே மறந்திருந்தன. மித்ராவின் கண்ணீரும், குழந்தைகளின் விம்மலும் அவனுக்குள் இருந்த அசுரனை முழுமையாகத் தட்டி எழுப்பியிருந்தது.
“விவேக்! மித்ராவையும் பசங்களையும் பத்திரமா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ. ஒரு சின்னக் கீறல் விழுந்தாலும் உன் உயிரை நானே எடுப்பேன்,” என்று தனது நம்பிக்கைக்குரிய பாதுகாப்பு அதிகாரியிடம் கர்ஜித்தான் அக்னி.
“அக்னி! நீங்க எங்க போறீங்க? வேண்டாமே!” என்று மித்ரா அவனது கையைப் பற்றித் தடுத்தாள்.
அக்னி அவளது கையில் ஒரு முத்தமிட்டு, அவளது கண்களை ஆழமாகப் பார்த்தான். “இன்னைக்கு நான் இதை முடிக்கலைன்னா, நாம எப்போவும் இப்படி ஓடிட்டே தான் இருக்கணும் மித்ரா. என் வாரிசு நிம்மதியா தூங்கணும்னா, அந்த மூணு பேரும் இன்னைக்குத் தூங்கக் கூடாது,” என்று அவளது கையை விடுவித்துவிட்டு, தனது கறுப்பு நிற எஸ்.யு.வி காரில் ஏறிப் பண்ணை வீட்டை நோக்கிப் பாய்ந்தான்.
நகரின் எல்லையில் இருந்த அந்தப் பண்ணை வீடு, விக்ரம் மற்றும் கூட்டாளிகளின் ரகசியக் கூடாரம். அக்னி அங்கே சென்றபோது, அவனது வீரர்கள் ஏற்கனவே அந்த இடத்தை வளைத்திருந்தனர். துப்பாக்கிச் சத்தங்கள் காற்றில் அதிரத் தொடங்கின.
அக்னி காரில் இருந்து இறங்கினான். அவனது கையில் ஒரு நீண்ட கத்தி மின்னியது. துப்பாக்கிக் குண்டுகளை விட அவனது வேகம் அதிகமாக இருந்தது. எதிரே வந்த அடியாட்களை ஒரு நொடியில் சரித்துவிட்டு, பண்ணை வீட்டின் கதவை உதைத்துத் திறந்தான்.
உள்ளே ரகுநாத்தும் நடராஜனும் தப்பிச் செல்ல வழியின்றிப் பதற்றத்துடன் நின்றனர். விக்ரம் தனது காயம்பட்ட காலால் நகர முடியாமல் ஒரு நாற்காலியில் சாய்ந்திருந்தான்.
“அக்னி! சட்டம் இருக்கு… எங்களைக் கொல்ல உனக்கு உரிமை இல்லை!” என்று ரகுநாத் அலறினான்.
அக்னி எள்ளி நகையாடினான். “என் பொண்டாட்டிக் கழுத்துல கத்தி வைக்கும்போது உன் சட்டம் எங்கே போச்சுடா?” என்று கேட்டுக்கொண்டே ரகுநாத்தின் காலில் ஒருமுறை சுட்டான்.
ரகுநாத் வலியால் துடித்தான். நடராஜன் நடுங்கிக்கொண்டே அக்னியின் காலில் விழப் போனார். “அக்னி… என்னை விட்டுடு… எல்லாத்துக்கும் காரணம் அந்த விக்ரம்தான்!”
அக்னி அவரைத் தள்ளிவிட்டான். “நீங்க எல்லாரும் ஒரே குட்டையில ஊறின மட்டைகள் தான். உங்களை இப்போவே கொன்னா அந்த எமனுக்குப் பிடிக்காது. நீங்க மூணு பேரும் செத்துச் செத்து வாழணும்,” என்று தனது வீரர்களிடம் சைகை காட்டினான்.
அப்போது விக்ரம் திடீரென்று மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை அக்னியை நோக்கி எடுத்தான். ஆனால் அக்னி இமைக்கும் நேரத்தில் தனது கத்தியை வீசினான். அது விக்ரமின் கையைப் பிளந்தது.
“இனி உன் கையால ஒரு துப்பாக்கியைக் கூடத் தொட முடியாது விக்ரம்!” என்று அக்னி அவனது சட்டையைப் பிடித்துத் தூக்கினான்.
அந்தப் பண்ணை வீடே அதிரும்படி அக்னியின் ருத்ரதாண்டவம் அரங்கேறியது. அக்னி அவர்களைக் கொல்லவில்லை; ஆனால் அவர்கள் மீண்டும் ஒருபோதும் அக்னியின் நிழலைக் கூட நினைக்காத அளவுக்குச் சிதைத்தான்.
போலீஸ் படை வந்து சேர்ந்தது. அக்னி அந்த மூவரையும் போலீஸிடம் ஒப்படைத்தான். “இன்ஸ்பெக்டர்… இவங்க செஞ்ச அத்தனை கொலை முயற்சிக்கும் என்கிட்ட டிஜிட்டல் ஆதாரம் இருக்கு. இந்த முறை இவங்க ஜாமீன்ல வந்தா, அந்த நீதிபதியையும் நானே விசாரிப்பேன்!” என்று எச்சரித்தான்.
அன்று நள்ளிரவு…
மாளிகைக்குத் திரும்பிய அக்னி நேராக மித்ராவின் அறைக்குச் சென்றான். மித்ரா தூங்காமல் வாசலையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். அக்னியைக் கண்டதும் ஓடி வந்து அவனது மார்பில் சாய்ந்து அழுதுவிட்டாள்.
அக்னி அவளை இறுக அணைத்துக்கொண்டான். அவனது சட்டையில் இருந்த ரத்தக் கறைகளை மித்ரா கண்ணீரால் துடைத்தாள்.
“முடிஞ்சது மித்ரா… இனி நம்ம வாழ்க்கையில எந்தப் புயலும் வராது,” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
அக்னி அவளை மெதுவாகத் தூக்கிப் படுக்கையில் கிடத்தினான். அவளது சோர்வான முகத்தையும், அந்த அழகான வயிற்றையும் வருடினான். அந்த இரவு, அவர்களின் காதலுக்குப் புதிய அர்த்தத்தைத் தந்தது. அக்னி அவளருகே படுத்து, அவளைத் தன் அணைப்பிற்குள் சிறைபிடித்தான்.
மாதங்கள் சென்றது..
மாளிகை முழுவதும் வளைகாப்பு விழாவிற்காக மின்னொளியில் ஜொலித்தது. மித்ரா, ஏழு மாதக் கர்ப்பிணியாக பச்சை நிறப் பட்டு உடுத்தி, கைகளில் அடுக்கடுக்காக வளையல்கள் குலுங்க அமர்ந்திருந்தாள். அக்னி அவளருகே அமர்ந்து, ஒவ்வொரு வளையலாக எடுத்து மென்மையாக அணிவித்துக்கொண்டிருந்தான். அவனது ஸ்பரிசத்தில் மித்ராவின் முகம் நாணத்தில் சிவந்தது.
சாவித்திரி அம்மாவும் சுந்தரமூர்த்தி ஐயாவும் தன் மகன், மருமகள், பேர குழந்தைகள் என்று ஒரு அழகிய குடும்ப அமைப்பை பார்த்து சந்தோஷப்பட்டார்கள்..
தங்களுக்கு ஒற்றை வாரிசு தானே என்று கவலைப்பட்டவர்களுக்கு , தன் வாரிசுக்கு மூன்று வாரிசுகள் இருப்பதை பார்த்து பெருமிதம் கொண்டார்கள்.
அப்போது கூட்டத்தை விலக்கிக்கொண்டு ரேகா உள்ளே வந்தாள். அவளது முகத்தில் ஒரு விகாரமான புன்னகை. “வாழ்த்துகள் அக்னி! ஆனா இந்த வாழ்த்து நீங்க நினைக்குற மாதிரி சந்தோஷமானது இல்லை,” என்று உரக்கக் கத்தினாள்.
அரங்கம் அமைதியானது. அக்னி எழுந்து நின்றான். “ரேகா! இங்க எதுக்கு வந்தே? விசேஷம் நடக்குற இடத்துல தேவையில்லாத வேலை பார்க்காதே,” என்று எச்சரித்தான்.
ரேகா நக்கலாகச் சிரித்தாள். “விசேஷமா? அக்னி… உன்னை ஏமாத்திட்டு இருக்குற இந்தப் பொண்ணுக்கு நீ விசேஷம் கொண்டாடுறியா? அக்னி, உனக்குத் தெரியுமா… மித்ரா உன்னை ஒருபோதும் காதலிக்கவே இல்லை. அவ ஆசிரமத்துல இருந்தப்பவே வேற ஒருத்தனை உயிரையும் மேலா காதலிச்சிருக்கா. அவனை நினைச்சுதான் இப்போவும் வாழ்ந்துட்டு இருக்கா. இவ ஒரு ‘செட்-அப்’ பண்ணிதான் இந்த வீட்டுக்குள்ள வந்தா!”
கூட்டத்தில் முணுமுணுப்பு எழுந்தது. அக்னியின் முகம் இறுகியது. அவன் மித்ராவைப் பார்த்தான். மித்ராவின் கண்கள் கலங்கியிருந்தன, ஆனால் அவள் பேசவில்லை.
“மித்ரா… என்ன சொல்றா இவ? உண்மையா?” என்று அக்னி கணத்த குரலில் கேட்டான்.
மித்ரா மெதுவாக எழுந்தாள். “ஆமாம் அக்னி… நான் ஒருத்தனை என் காலேஜ் நாள்ல இருந்தே ஒருதலையா காதலிச்சது உண்மைதான். அவனைத் தவிர வேற யாரும் என் மனசுல இல்ல,” என்று சொல்லிக்கொண்டே விறுவிறுவென்று தனது அறைக்குள் சென்றாள்.
ரேகா வெற்றிக் களிப்புடன் அக்னியைப் பார்த்தாள். “பார்த்தியா அக்னி? அவளே ஒத்துக்கிட்டா! இப்போ சொல்லு… இவ உனக்குத் துரோகம் பண்ணலையா?”
அக்னி எதுவும் பேசாமல் மித்ராவின் அறைக்குச் சென்றான். பின்னாலேயே ரேகாவும் மற்றவர்களும் சென்றனர். மித்ரா தனது பீரோவில் இருந்து ஒரு பழைய, பூப்போட்ட டைரியை எடுத்து அக்னி முன்னால் நீட்டினாள்.
“இதோ… இதுதான் என் காதல். நான் காதலிச்ச அந்த ஆளோட போட்டோவும், அவரைப் பத்தின என் நினைவுகளும் இதுல தான் இருக்கு. பாருங்க,” என்று டைரியைத் திறந்தாள்.
ரேகா ஆவலுடன் எட்டிப் பார்த்தாள். அங்கே அக்னியின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. அக்னி தனது கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக வந்தபோது எடுத்த அந்தப் புகைப்படம் அது. அதன் கீழே மித்ராவின் கையெழுத்தில்:
‘இன்று அவரை முதன்முதலில் பார்த்தேன். அக்னி புத்திரன்… என் இதயத்தைத் திருடிய அசுரன். அவர் யாருக்குச் சொந்தமானாலும், என் காதல் அவருக்கு மட்டும்தான்!’
ரேகாவின் முகம் அப்படியே உறைந்து போனது. அவளுக்குப் பெரும் ‘பல்ப்’ எரிய, அக்னி திகைத்து நின்றான்.
“மித்ரா… அப்போ நீ காதலிச்சது… என்னைத்தானா?” என்று அக்னி நெகிழ்ச்சியில் விம்மினான்.
மித்ரா கண்ணீருடன் சிரித்தாள். “ஆமாம் அக்னி. நீங்க அன்னைக்கு என்ன பாத்து லவ் பண்றேன்னு சொன்னீங்க. எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும். உங்கள பத்தி எல்லாமே கேள்விப்படுவேன் சந்தோஷப்படுவேன்.
ஆனா, நீங்க ஸ்வேதா அக்காவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டப்போ என் காதலை புதைச்சிட்டு என் வாழ்க்கை ஒழுக்கங்கள் நினைத்துக்கொண்டே வாழாமல் முடிவு பண்ணிட்டேன். அப்புறம் உங்க குழந்தைகளுக்குத் தாய் இல்லைன்னு தெரிஞ்சப்போ, ஒரு வேலைக்காரியா வந்தாவது உங்களுக்கும் அந்தப் பிள்ளைகளுக்கும் அன்பு காட்டணும்னு தான் இங்க வந்தேன். என் காதல் உங்களைக் காயப்படுத்தக் கூடாதுன்னு தான் இவ்வளவு நாள் மறைச்சேன்,” என்று ஆரியன் மித்ரன் இருவரையும் ஒருசேர அனைத்து கொள்ள இரு குழந்தைகளும் தங்கள் அம்மா அழுவதை பார்த்து கண்ணீரை துடைத்தார்கள்.
அக்னி டைரியைத் தூக்கி எறிந்துவிட்டு, மித்ராவை அப்படியே வாரியணைத்துக் கொண்டான். “முட்டாள்! உனக்குள்ள இவ்வளவு பெரிய காதலை வச்சுட்டு எப்படிடி இவ்வளவு நாள் அமைதியா இருந்தே? நீ ஒருவேளை அன்னைக்கே என்கிட்ட சொல்லியிருந்தா, நான் கொடுமையாக வாழ்ந்த நரகம் அப்பவே முடிஞ்சிருக்குமே!” என்று அவளது நெற்றியில் அனல் தெறிக்க முத்தமிட்டான்.
அக்னி ரேகாவைப் பக்கம் திரும்பி, அவளது கழுத்தைப் பிடித்து வாசலுக்குத் தள்ளினான். “ரேகா! அவ யாரையோ காதலிக்கிறான்னு சொல்லி எங்களைப் பிரிக்கப் பார்த்தே. ஆனா, அவ என்னையே காதலிக்கிறான்னு தெரிய வச்சு, எங்களைப் பலமாச் சேர்த்து வச்சுட்டே! இனி உன் முகத்தைக் காட்டாதே… பிடிச்சு ஜெயில்ல போட்டுடுவேன்!”
ரேகா அவமானத்தில் தலைகுனிந்து ஓடினாள். அக்னி மித்ராவை மீண்டும் மேடைக்கு அழைத்து வந்தான். “இன்னைக்கு இது வளைகாப்பு மட்டும் இல்லை… என் காதலிக்கு நான் சூட்டுற மகுடம்!” என்று சொல்லி, அவளது கைகளில் முத்தமிட்டான். மாளிகை முழுவதும் கைதட்டல் ஒலியால் அதிர்ந்தது.