Home ANTIHERO25) இளமை 😍

25) இளமை 😍

by sreejanovels
2 views

அத்தியாயம் 25

   அதிரவனின் பங்களாவில் அன்று இரவு ஒரு கனத்த மௌனம் நிலவியது. அதிரவன் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். மீட்டிங்கில் சுருதி அப்படிப் பேசியபோது தான் அமைதியாக இருந்தது மீனாட்சியை இவ்வளவு பாதிக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

மீனாட்சி பால்கனியில் நின்று இருளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதிரவன் மெல்ல அவளருகில் வந்தான். “மீனாட்சி, நேத்து நடந்ததை நினைச்சு நீ இன்னும் அப்செட்டா இருக்காத. அந்தச் சுருதி வேணும்னே தான் அப்படிப் பேசுனா,” என்றான் ஓரளவுக்கு நிதானமாக.

மீனாட்சி மெல்லத் திரும்பி அவனைப் பார்த்தாள். “அவ வேணும்னே தான் பேசுனான்னு உங்களுக்குத் தெரியுதுல்ல? அப்புறம் ஏன் அந்த இடத்துல நீங்க அமைதியா இருந்தீங்க? இளமாறன் என்னை அந்த மாதிரி ஒரு பார்வையில பார்த்தப்போ கூட நீங்க பிசினஸ் ஃபைலைத் தான் பாத்துட்டு இருந்தீங்க. உங்களுக்கு நான் முக்கியமா இல்ல உங்க பிசினஸ் முக்கியமா?” என்று நேரடியாகக் கேட்டாள்.

அதிரவனுக்கு மீண்டும் ஈகோ தலைதூக்கியது. “மீனாட்சி! அது ஒரு பிசினஸ் சென்டர். அங்க போய் நான் கத்தி ரகளை பண்ணிட்டு இருக்க முடியாது. எனக்கு என் இமேஜ் முக்கியம்,” என்று சற்றே குரலை உயர்த்தினான்.

“உங்க இமேஜ் தான் உங்களுக்கு முக்கியம்… நான் இல்லை. அந்தச் சுருதி சொன்னது நிஜம் தான் போல. உங்களுக்கு அவ மேல இன்னும் ஏதோ ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு, அதான் அவளை அடக்கல,” என்று சொல்லிவிட்டு மீனாட்சி அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள். அதிரவன் ஆத்திரத்தில் சுவரில் ஓங்கி குத்தினான். அவளால் சந்தேகப்பட முடிகிறதே தவிர, அவனது பிசினஸ் நெருக்கடியைப் புரிந்துகொள்ள முடியவில்லையே என்ற கோபம் அவனுக்கு.

அதே சமயம், கள்ளிக்காட்டு கிராமத்தில்…

தென்னரசு உண்மையிலேயே மாற முயற்சி செய்தான். ஆனால், அன்று ஃபேக்டரி சப்ளை விஷயத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய நஷ்டம் அவனது ஆத்திரத்தைத் தூண்டியது. வீட்டுக்கு வந்தவன், வைஷ்ணவி வைத்திருந்த காபி கோப்பையைத் தட்டிவிட்டான். “என்னடி காபி இது? ஒரு மனுஷன் வெளியில எவ்வளவு டென்ஷன்ல வர்றான்… உனக்கு ஒரு வேலையும் உருப்படியா செய்யத் தெரியாதா?” என்று கத்தினான்.

வைஷ்ணவி அதிர்ந்து போனாள். “மாமா… இப்ப என்ன ஆச்சு?? சம்மதமே இல்லாம என்கிட்ட மூஞ்சி காட்டிகிட்டு இருக்கீங்க. கொஞ்ச நாள் நல்லா இருந்தீங்க அதுக்குள்ள மறுபடியும் உங்க புத்தியை காட்டுறிங்க”.

என்று அவளும் அவனைப் பார்த்து நேருக்கு நேராக கேட்க.

“நான் கத்துவேன்டி! இது என் வீடு, நான் இப்படித்தான் இருப்பேன். புடிச்சா இரு இல்லன்னா போ!” என்று கத்தினான் தென்னரசு. அவனது அந்தப் பழைய ஆணாதிக்கக் குணம் மீண்டும் தலைதூக்கியது. வைஷ்ணவி அழுதுகொண்டே மூலைக்குச் சென்றாள். ‘வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது’ என்பதை அவள் உணர்ந்தாள்.

இளமாறன் சென்னையில் தனது ரகசிய இடத்தில் சுருதியுடன் பேசிக்கொண்டிருந்தான். “சுருதி… நம்ம பிளான் சூப்பரா ஒர்க்-அவுட் ஆகுது. அதிரவனுக்கும் மீனாட்சிக்கும் நடுவுல விரிசல் விழ வழிவகுத்து இருக்கோம். அவன் பிசினஸ்ல கவனம் சிதறிட்டு இருக்கான். மீனாட்சி மேல மட்டும் ஒரு கண்ணு வை. அதிரவனை வீழ்த்த அவதான் சரியான வழி,” என்று சதித் திட்டம் தீட்டினான்.

அந்த இரவில், சென்னையில் மீனாட்சியும் கள்ளிக்காட்டில் வைஷ்ணவியும் ஒரே மாதிரியான மனவலியில் இருந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் இப்போது ஒரு ரகசிய முடிவை எடுக்கப் போகிறார்கள் என்பது நமது நாயகர்களுக்கு தெரியாது.

ஐந்து நிமிடம் மாற அமர அமர்ந்து கொண்டு பேசினாலும் இவர்களின் குணம் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல் தான்.


அதிரவன் பங்களா, இன்று ஒரு இடுகாட்டின் அமைதியைத் தத்தெடுத்திருந்தது. அதிரவன் படுக்கையில் அமர்ந்து ஜன்னல் வழி தெரிந்த நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் கண்கள் எதையும் பார்க்கவில்லை. அவன் காதுகளில் மீனாட்சி கடைசியாகச் சொன்ன அந்த வார்த்தைகள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தன.

“உங்களுக்கு உங்க பிசினஸ் தான் முக்கியம்… நான் வெறும் அலங்காரப் பொம்மை தான்!”

இந்த வார்த்தையில் இருந்த வலி அவனது ஆணாதிக்க இதயத்தை மெல்லக் கசியச் செய்தது. இதுவரை எதற்கும் கலங்காத அதிரவன், இன்று மீனாட்சியின் மௌனத்தைக் கண்டு நிலைகுலைந்து போயிருந்தான். அவன் மெல்ல எழுந்து மீனாட்சியின் அறைக்குச் சென்றான். அவள் உறங்கவில்லை, விளக்கை அணைத்துவிட்டு இருட்டில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவளது தேம்பல் சத்தம் அந்த அறையின் அமைதியைக் கிழித்தது.

“மீனாட்சி…” என்று அதிரவன் அழைத்த குரலில் எப்போதும் இருக்கும் அதிகாரம் இல்லை, ஒருவிதத் தவிப்பு இருந்தது.

மீனாட்சி பதில் சொல்லவில்லை. அவளது மௌனம் ஒரு சாட்டையடியாக அவன் மேல் விழுந்தது. அவன் அவளருகில் சென்று அமர்ந்தான். அவளது மென்மையான கரங்களைப் பற்ற முயன்றான். ஆனால், மீனாட்சி சட்டெனத் தனது கையை விலக்கிக் கொண்டாள். அந்தத் தொடுதல் கூட இப்போது அவளுக்கு ஒரு அந்நியத் தன்மையைக் கொடுத்தது.

“என்னைத் தொடாதீங்க அதிரவன். உங்க கைகளுக்கு அதிகாரம் தான் தெரியும், அன்பு தெரியாது. சுருதி முன்னாடி நான் அவமானப்பட்டு நின்னப்போ, உங்க மௌனம் என்னை எவ்வளவு கொன்னுச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா? ஒரு பெண்ணோட தன்மானத்தை விட உங்களுக்கு உங்க பிசினஸ் இமேஜ் பெருசாப் போச்சு இல்லையா? அப்புறம் எதுக்கு இந்த நடிப்பு?” என்று அவள் விம்மினாள்.

அதிரவன் வாயடைத்துப் போனான். அவனது ஈகோ அவனிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லியது, ஆனால் அவனது பழக்கப்பட்ட சுபாவம் அவனைத் தடுத்தது. அவன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அங்கிருந்து வெளியேறினான். அந்த இரவு இருவருக்குமே ஒரு நரகமாக மாறியது.

மறுபுறம் …

அங்கே தென்னரசுவின் நிலைமை இன்னும் வேதனையாக இருந்தது. அவன் உண்மையிலேயே மாற வேண்டும் என்று நினைத்தான், ஆனால் அவனது ரத்தத்தில் ஊறிய அந்த ஆவேசம் அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டது. வைஷ்ணவி வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து, தனது கைகளில் இருந்த அந்தச் சிவந்த தழும்பைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தென்னரசு காபி கோப்பையைத் தட்டிவிட்டபோது சிதறிய துளிகள் அவள் கையில் பட்டிருந்தன.

தென்னரசு அவளருகில் வந்து குனிந்து அமர்ந்தான். “வைஷு… நான் தெரியாம செஞ்சுட்டேன்டி. ஏதோ ஒரு ஆத்திரத்துல…” என்று அவன் சொல்ல வரும்போதே, வைஷ்ணவி அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அந்தப் பார்வையில் இருந்த வெறுப்பு தென்னரசுவைச் சுட்டெரித்தது. “தெரியாம ஒரு தடவை நடக்கும் மாமா… ஆனா இது உங்க குணம். நீங்க மாறவே மாட்டீங்க. நான் உங்களை எவ்வளவு நம்புனேன் தெரியுமா? நீங்க அன்பு காட்டுன அந்த ரெண்டு நாள்ல, என் உலகம் முழுசும் நீங்கதான்னு நினைச்சேன். ஆனா, அந்த நம்பிக்கையை இப்போ சுக்குநூறா உடைச்சுட்டீங்க,” என்று அவள் சொல்லச் சொல்ல, தென்னரசுவின் கண்கள் கலங்கின.

“இனிமே என்மேல கை வைக்காதீங்க. ஏன்னா, உங்க அடி வாங்குற அளவுக்கு நான் இப்போ பலவீனமா இல்லை. என் மனசு கல்லாயிடுச்சு,” என்று வைஷ்ணவி சொன்னது தென்னரசுவின் நெஞ்சில் ஒரு பாரமான கல்லை ஏற்றி வைத்தது போல இருந்தது.

இரண்டு வீடுகளிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன, ஆனால் அந்த மனிதர்களின் மனங்கள் இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்தன. பெண்களுக்கு ஏற்பட்ட அந்த மனவலி இப்போது ஒரு வைராக்கியமாக மாறியிருந்தது.

மறுநாள் காலை…

மீனாட்சியும் வைஷ்ணவியும் போனில் பேசிக்கொண்டனர். அவர்கள் இருவருமே ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்திருந்தனர்.

“மீனு.. நாம அழக்கூடாது. அவங்களுக்குப் புரிய வைக்கணும்னா நாம அவங்ககிட்ட பேசாமலே இருக்கணும். அவங்களுக்குத் தேவையான எதையும் நாம செய்யக் கூடாது. அப்பதான் நம்மளோட அருமை அவங்களுக்குத் தெரியும்,” என்று வைஷ்ணவி சொன்னாள்.

“நிச்சயமா வைஷு. இதுதான் அவங்களுக்கான தண்டனை. சண்டை போட்டுத் தீராத பிரச்சனை, இந்த மௌனத்துல தீரட்டும்,” என்று மீனாட்சி முடிவெடுத்தாள்.

அன்று முதல், அந்த இரண்டு வீடுகளிலும் ஒரு புதுவிதமான போர் தொடங்கியது. அது ஆயுதங்கள் இல்லாத போர்; வார்த்தைகள் இல்லாத போர். வெறும் மௌனம் மட்டுமே அந்த ஆண்களை அணு அணுவாகச் சிதைக்கத் தொடங்கியது.

அதிரவன் சாப்பிட அமர்ந்தான். மேசையில் அவனுக்குப் பிடித்த உணவுகள் இல்லை. மீனாட்சி அவனைக் கடந்து சென்றாள், ஆனால் ஒரு பார்வைகூட அவன்மேல் விழவில்லை. அவனது சட்டை அயர்ன் செய்யப்படவில்லை, அவனது வாட்ச் எங்கே இருக்கிறது என்று கேட்கக் கூட அவனுக்குத் துணிவில்லை.

“உங்களுக்கு உன் தேவையானது எல்லாம் இனி, நான்தான் செய்யப் போறேன் சமையல் உங்களுக்கான தேவைகள் எல்லாம் நான்தான் பூர்த்தி செய்வேன்..”

என்று சொன்னவள் இன்று மௌனமாக தன்னை எதிர் கொண்டிருக்கிறாள் என்று அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இங்கே…

தென்னரசுவின் வீட்டிலும் அதே நிலைமைதான். அவன் சத்தம் போட்டால் வைஷ்ணவி பதில் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து விடுகிறாள். அவன் பாவமான பார்த்தால் அவளுக்கு இரக்கம் வரவில்லை.

இந்த மௌனமான தண்டனை அந்த முரட்டு ஆண்களைப் பித்தனாக்கத் தொடங்கியது. தங்களது அதிகாரம் எதற்கும் பயன்படவில்லை என்பதை அவர்கள் உணர ஆரம்பித்த அந்தத் தருணம் தான், ஆணாதிக்கத்தின் முதல் வீழ்ச்சியாக அமைந்தது.

—….

You may also like

Leave a Comment

About Me

Featured