அத்தியாயம் 17
அன்று இரவு மாளிகை முழுவதும் நிசப்தமாக இருந்தது. அக்னி தனது மேஜை மீதிருந்த அந்தப் பழைய டைரியைத் தடவிக்கொண்டிருந்தான். அதன் பக்கங்களில் படிந்திருந்த ஒவ்வொரு எழுத்தும் அவனது கடந்த கால ரத்தமும் கண்ணீருமாகும். மித்ரா மெதுவாகப் பால் செம்புடன் உள்ளே வந்தாள். அக்னியின் முகம் இன்று ஏதோ ஒரு பாரத்தைச் சுமப்பது போல் இருப்பதை அவள் உணர்ந்தாள்.
“அக்னி… இன்னும் தூங்கலையா? என்ன யோசனை?” என்று கேட்டபடி அவன் அருகே அமர்ந்தாள் மித்ரா.
அக்னி அந்த டைரியை அவளிடம் காட்டினான். “இந்த டைரிதான் மித்ரா என் வாழ்க்கையில நான் பட்ட சித்திரவதையோட சாட்சி. வெளிய இருக்கிறவங்களுக்கு ஸ்வேதா ஒரு அழகான, அமைதியான பொண்ணு. ஆனா அந்த நாலு செவத்துக்குள்ள அவ ஒரு மிருகம்!”
அக்னி சொல்லச் சொல்ல, கடந்த காலக் காட்சிகள் அவன் கண் முன்னே நிழலாடின.
“மித்ரா… உன்னைக் காலேஜ்ல பார்த்த அந்த நிமிஷமே நான் உன்னை என் மனசுல வச்சுட்டேன். ஆனா அப்போ என் பிசினஸ்ல ஒரு பெரிய சரிவு. அதைச் சாதகமாக்கிட்ட நடராஜன், ‘என் பொண்ணு ஸ்வேதாவைக் கல்யாணம் பண்ணிக்கோ, உன் கடனை நான் அடைக்கிறேன்’னு சொன்னாரு. நான் மறுத்தப்போ, எங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வர வச்சு, அவரை வச்சே என்னை எமோஷனல் பிளாக்மெயில் பண்ணி ஸ்வேதாவை என் கழுத்துல கட்டுனாங்க.”
அக்னியின் குரல் கரகரத்தது. “கல்யாணம் ஆன புதுசுல அவளை ஏத்துக்க நான் முயற்சி பண்ணினேன். ஆனா அவளுக்குள்ள இருந்த அந்த அகம்பாவம்… தான் ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணுங்கிற திமிர் அவளை யாரையும் மதிக்க விடல. என் அப்பா அம்மாவை வேலைக்காரங்க மாதிரி நடத்தினா. நான் ஏதோ அவகிட்ட விலை போன அடிமை மாதிரி என்னை நடத்தினா. ஒரு வருஷம் அவகாசம் கேட்டு நான் அவளை விட்டுத் தள்ளி இருந்தப்போ, ‘என்கூட வாழலன்னா இப்போவே செத்துடுவேன்’னு கத்தியை எடுத்துத் தன் கையை அறுத்துக்கிட்டு மிரட்டுவா. உடலுறவில கூட எனக்கு விருப்பம் இல்லைன்னாலும், பிளாக்மெயில் பண்ணித்தான் என்னை அவ வழிக்குக் கொண்டு வந்தா.”
மித்ரா அதிர்ச்சியில் உறைந்து போனாள். அக்னியின் அந்தப் பிரம்மாண்டமான தோற்றத்திற்குப் பின்னால் இவ்வளவு பெரிய வலி இருக்குமென்று அவள் நினைக்கவில்லை.
“இரண்டாவது குழந்தை மித்ரன் பிறந்த ஆறு மாசம் வரைக்கும் நான் இதைப் பொறுத்துக்கிட்டேன். ஒருநாள் என் ஆபீஸ்ல இருந்த இந்த டைரியை அவ எடுத்துப் பார்த்தா.
அதுல உன்னோட அந்த நாட்டியமாடுற போட்டோவையும், ‘என்னவள்’னு நான் எழுதினதையும் பார்த்ததும் அவளுக்குள்ள இருந்த மிருகம் முழுசா வெளில வந்தது. ‘நீ யாரையோ காதலிச்சுட்டு என்னை ஏமாத்துறியா?’னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணா. ஆனா அந்த டைரியில நான் தெளிவா எழுதியிருந்தேன்…
‘மித்ரா ஒரு நல்ல பொண்ணு, அவளை என்னால மீட்டெடுக்க முடியல, ஸ்வேதாவுக்கு நான் துரோகம் பண்ணல, ஆனா அவ என்னை இன்னும் புரிஞ்சுக்காம பிடிவாத குணத்தோட இருக்கா’னு. அதை அவ படிக்கவே இல்லை.”
அக்னி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். “தன்னோட பிடிவாதத்தால உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சுட்டோமேங்கிற குற்ற உணர்ச்சி ஒரு பக்கம், நான் உன்னை இன்னும் காதலிக்கிறேன்கிற ஆத்திரம் ஒரு பக்கம்… அந்தப் பைத்தியக்காரத்தனத்துல தான் குழந்தையை எங்க அம்மா கிட்ட கொடுத்துட்டு வண்டியை வேகமா ஓட்டிட்டுப் போய் விபத்துல செத்தா. இதெல்லாம் சுப்பிரமணிக்குத் தெரியாது. அவளைத் தேவதைன்னு அவர் நம்பிட்டு இருக்காரு. அதன் பிறகு தான் நான் எல்லாருக்காகவும் அமைதியா பொறுத்துப் போனேன் ஆனா, அப்புறம் யோசிச்சு இந்த ஒரு வருஷம் மேல ரொம்ப மோசக்காரனா மாத்துனதே என்னோட வாழ்க்கை தான்.”
அக்னி பேசப் பேச, மித்ராவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அக்னி தன்னை இவ்வளவு ஆழமாகக் காதலித்திருக்கிறான் என்பதும், தனக்காக இவ்வளவு நரகத்தை அனுபவித்திருக்கிறான் என்பதும் அவளுக்குப் பெரும் பாரமாக இருந்தது.
அவள் மெதுவாக அக்னியின் கைகளைப் பற்றினாள். “அக்னி… இனி அந்தப் பழைய நினைவுகள் வேண்டாம். இப்போ நான் உங்க கூட இருக்கேன். உங்க பிள்ளைங்களுக்குத் தாயா, உங்களுக்குப் பாதியா நான் எப்பவும் இருப்பேன்,” என்றாள் உருக்கமாக.
அக்னி அவளைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டான். “மித்ரா… நீ என் வாழ்க்கையில கிடைச்ச ஆகப்பெரிய பொக்கிஷம். உன்னை இனி ஒரு நொடி கூடப் பிரியமாட்டேன்,” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
அந்த நள்ளிரவு அமைதியில், அக்னியின் அறையில் மெல்லிய நிலவொளி மட்டும் ஜன்னல் திரை வழியே கசிந்து கொண்டிருந்தது. இத்தனை ஆண்டுகால வலியையும், ஸ்வேதாவிடம் இழந்த நிம்மதியையும் மித்ராவின் மடியில் கொட்டித் தீர்த்த அக்னிக்கு, அவளது அருகாமை ஒரு மருந்தாக அமைந்தது.
அக்னியின் கண்களில் தேங்கியிருந்த அந்த நீண்ட காலத் தவிப்பை மித்ரா தன் விரல்களால் துடைத்தாள். அவளது ஸ்பரிசம் அவனுக்குள் ஒரு புதிய விடியலைத் தந்தது. ஒருவருக்கொருவர் காதலைச் சொல்லிக்கொள்ளாமலேயே, அந்த மௌனத்தில் ஆயிரம் அர்த்தங்கள் பரிமாறப்பட்டன.
அக்னி மெல்ல மித்ராவின் கைகளைப் பற்றினான். அவளது விரல்கள் நடுக்கத்துடன் அவனது கைகளுக்குள் தஞ்சமடைந்தன. அவன் அவளது முகத்தை இரு கைகளாலும் ஏந்த, மித்ராவின் இதயம் ஒரு சின்னப் பறவையைப் போலத் துடித்தது.
நிலவின் ஒளியில் நனைந்த மௌனம்,
விழிகள் பேசும் விசித்திர ராகம்!
இத்தனை ஆண்டு காலத் தாகம்,
இன்று தீருதோ இந்தப் பாசம்!
கைகள் கோர்த்து இதயம் பேச,
காலம் மறந்து காதல் வீச,
அவனது தோளில் இவள் சாய,
அவளது கூந்தலில் அவன் கரைய!
சிதறிய காயங்கள் ஆறும் நேரம்,
சிறைப்பட்ட உணர்வுகள் மலரும் கோலம்!
இருவர் மூச்சும் ஒன்றாய் இணைய,
இரவும் மெல்ல வெட்கத்தில் நனைய!
அக்னி குனிந்து அவளது நெற்றியில் மென்மையாக ஒரு முத்தமிட்டான். அந்த முத்தம் வெறும் அன்பு மட்டுமல்ல, “இனி உன்னை ஒருபோதும் விடமாட்டேன்” என்கிற சத்தியம். மித்ரா கண்களை மூடி அந்தப் பாதுகாப்பை உணர்ந்தாள்.
அக்னியின் பலமான தோள்கள் அவளைச் சுற்றி வளைக்க, மித்ரா அவனது மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். இத்தனை காலமும் பிரிந்திருந்த இரு ஆத்மாக்கள், இன்று ஒருமித்த உணர்வில் சங்கமித்தன. அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் காதலின் மணம் பரவியது. அக்னி அவளை இன்னும் நெருக்கமாக இழுக்க, இருவரின் இதயத்துடிப்பும் ஒரே தாளத்தில் ஒலிக்கத் தொடங்கியது.
கடந்த காலத்தின் கசப்பான நினைவுகள் அனைத்தும் அந்த நள்ளிரவு காதலில் எரிந்து சாம்பலாகின. அக்னிக்கும் மித்ராவிற்கும் இடையிலான அந்த உன்னதமான கூடல், ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமாக அமைந்தது.
—
ஆனால், மாளிகைக்கு வெளியே இவர்கள் மீது பகை கொண்டவர்கள் அமைதியாக இருப்பார்களா என்ன??.
அக்னியின் காதல் இப்போதுதான் முழுமை பெறத் தொடங்கியிருக்கிறது. ஆனால், இந்தப் புதிய எதிரி அவனது மகிழ்ச்சியில் விஷம் வைக்கக் காத்திருக்கிறான்.
அக்னியின் ரகசியப் பண்ணை வீட்டின் அந்த இருட்டு அறை. அங்கே காற்றைத் தவிர வேறொன்றும் நுழைய முடியாது. கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தரையில் சரிந்து கிடந்தாள் ரேகா. கடந்த சில நாட்களாக வெளிச்சத்தையே பார்க்காத அவளது கண்கள் குழி விழுந்து போயிருந்தன. கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதும், அவள் உடல் நடுங்கியது.
அக்னி கம்பீரமாக உள்ளே நுழைந்தான். அவனது கையில் ஒரு சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை, ஆனால் கண்களில் ஒரு மரண அமைதி நிலவியது.
“என்ன ரேகா… இந்த இருட்டு உனக்குப் பிடிச்சிருக்கா? இல்ல, உன் அக்கா ஸ்வேதா அனுபவிச்ச அந்த நரகத்தை விட இது கம்மிதானா?” அக்னியின் குரல் அந்த அறையில் எதிரொலித்தது.
ரேகா நடுங்கும் குரலில் கத்தினாள், “அக்னி… என்னை விட்டுடு! நான் வேணும்னு எதுவும் பண்ணல. எங்க அப்பா சொன்னதுக்காகத் தான் உன்னையும் மித்ராவையும் பிரிக்க நினைச்சேன். ஸ்வேதா அக்கா செத்ததுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை!”
அக்னி மெதுவாக அவள் முன்னால் குனிந்தான். “பொய் சொல்லாதே ரேகா… ஸ்வேதா விபத்துல சாகல, அவளை அந்த விபத்துக்குத் தூண்டுனதே நீதான்னு எனக்குத் தெரியும். என் ஆபீஸ்ல இருந்த அந்தத் தனிப்பட்ட டைரி அவ கைக்கு எப்படிப் போச்சு? அன்னைக்கு நீதானே அவகிட்ட கொண்டு போய் கொடுத்தே?”
ரேகா கதறி அழத் தொடங்கினாள். “ஆமா… நான்தான் கொடுத்தேன்! ஆனா அது ஏதோ காதல் டைரின்னு எனக்குத் தெரியாது. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கிறது எனக்குப் பிடிக்கல. ஸ்வேதா அக்கா எப்பவும் உங்களைச் சந்தேகப்பட்டுட்டே இருக்கணும்னு தான் அந்த டைரியை அவகிட்ட கொடுத்தேன். ஆனா அவ அதைப்படிச்சுட்டு இவ்வளவு பைத்தியக்காரத்தனமா வண்டி ஓட்டிட்டுப் போய் சாவான்னு நான் நினைக்கல!”
அக்னி அவளது தலைமுடியைப் பற்றித் தூக்கினான். “உன் பொறாமைக்காக ஒரு உயிரையே பலி வாங்கினியே… அதுவும் உன் சொந்த அக்காவையே! ஸ்வேதா அகம்பாவம் பிடிச்சவ தான், ஆனா அவளை விட நீ ரொம்பக் கேவலமானவ ரேகா. என் குடும்பத்தை அழிக்கத் திட்டம் போட்ட நடராஜனும், விக்ரமும் இப்போ உள்ள இருக்காங்க. உன்னையும் விடமாட்டேன்.”
ரேகா உளறத் தொடங்கினாள், “அக்னி… ஸ்வேதா அக்கா அந்த ஆக்சிடென்ட்க்கு முன்னாடி என்கிட்ட ஒன்னு சொன்னா. ‘அக்னி என்னை நேசிக்கலனாலும் பரவாயில்லை, அவரோட அந்த காதலி யாரு எப்படி இருந்தாலும் கண்டுபிடிச்சு கொன்னுடுங்கன்னு சொன்னா. வேற வேலை வெட்டி இல்ல போ அந்த பொண்ணு யாருன்னு எனக்கு என்ன தெரியும்னு திட்டி விட்டு போன கட் பண்ண.நான் அதை பெருசா கண்டுக்கல. அதான் அவ அவசரப்பட்டுத் தனக்குத்தானே ஆபத்து பண்ணிக்கிட்டா. என்னை விட்டுடு அக்னி… நான் இனி உங்க நிழல்ல கூட வரமாட்டேன்!”
அக்னி அவளை உதாசீனமாகத் தள்ளிவிட்டு எழுந்தான். “உன் அப்பாவாலயே என்னைத் தடுக்க முடியல, நீ என்ன பண்ணுவே? இந்த இருட்டுலேயே கிடந்து சாவு. உனக்கு வெளியுலகமே கிடையாது.”
அக்னி அறையை விட்டு வெளியே வந்து கதவைப் பூட்டினான். பண்ணை வீட்டின் வராந்தாவில் நின்றிருந்த தனது பாதுகாப்புப் படைத் தலைவனிடம் சொன்னான், “இவ சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் ரெக்கார்ட் ஆகணும். நடராஜனோட சாம்ராஜ்யத்தை மொத்தமா அழிக்க இதுதான் நமக்குக் கிடைச்ச ஆதாரம்.”
அக்னி காரில் ஏறி மாளிகையை நோக்கிப் புறப்பட்டான். அவனது மனதில் இப்போது ஒரு பெரிய பாரம் குறைந்திருந்தது. ஸ்வேதாவின் மரணத்தில் இருந்த அந்த மர்ம முடிச்சு அவிழ்ந்துவிட்டது. மித்ராவிற்குத் தெரியாமல் அவளைச் சுற்றி இருந்த ஆபத்துகளை அவன் ஒவ்வொன்றாக நீக்கிக் கொண்டிருந்தான்.
அக்னிக்குத் தெரியும், அவனது பிடியிலிருந்து எவனும் தப்பிக்க முடியாது. அவன் ஒரு அசுரன்… தன் குடும்பத்தைக் காக்க எந்த எல்லைக்கும் போவான்.