அத்தியாயம் 19
வேறு இடத்திற்குத் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அஞ்சலி செய்து கொண்டிருந்தாள். தனது தோழி வீட்டிற்கு அருகே இருக்கும் ஒரு கடையில் வேலை செய்து, மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் பெறுவதாகப் பேசி வைத்திருந்தாள். அதேபோல், தோழி வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் அவுட் ஹவுஸில் (Outhouse) மாதம் 3000 ரூபாய் வாடகைக்கு ஒரு வீடும் பார்த்து வைத்திருந்தாள். இன்னும் இரண்டு நாட்களில் ஹாஸ்டலைக் காலி செய்துவிட்டு, விஜய்யின் சகோதரியின் கணவர் இனியனிடம் மட்டும் “நான் வேறு இடம் பார்த்துச் செல்லப் போகிறேன், யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் செல்லலாம் என்ற திட்டத்தில் இருந்தாள். அன்று கோவிலுக்குச் செல்லலாம் என்று குடும்பத்தினர் அனைவரும் முடிவெடுத்திருந்தனர். இவர்களோடு செல்லும் கடைசிப் பயணமாக இது இருக்கட்டும் என்று அவளும் நினைத்திருந்தாள்.
அனைவரும் சாமி கும்பிட்டுவிட்டுத் கோவில் பிரகாரத்தைச் சுற்றிக் கொண்டிருந்தனர். அஞ்சலி இறைவனிடம் ஒரு பெரிய பட்டியலே போட்டு வேண்டிக் கொண்டிருந்தாள். கண்களை மூடி இறைவனை வணங்கிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில், அஞ்சலி எதிர்பார்க்காத வகையில் விஜய் அவள் கழுத்தில் தாலியைக் கட்டி முடித்திருந்தான். கண்களைத் திறந்து பார்த்த அஞ்சலி, தன் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் தாலி தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். திரும்பிப் பார்த்தபோது விஜய் அவளுக்கு முன்பாகப் புன்னகையோடு நின்றிருந்தான்.
பிரம்மையில் இருந்து மீண்டது போல அஞ்சலி தன் உடல் சிலிர்த்து நிமிர்ந்து பார்க்க, விஜய் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் நிம்மதியாக இருந்தான். சுற்றியிருந்தவர்களும் மகிழ்ச்சியுடன் அவர்கள் மீது அட்சதையைத் தூவத் தயாராக இருந்தனர். அப்படி என்றால் மொத்தக் குடும்பமும் திட்டம் போட்டுச் செய்ததா என்று மிகவும் கவலையோடு அவர்களைப் பார்த்தாள் அஞ்சலி.
“அவனோட கடந்த காலம் ரொம்ப வலி நிறைந்தது. ஆனா திடீர்னு நேத்து எனக்கு அஞ்சலி வேணும், நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்னு சொன்னான். ‘நான் உன்கிட்டப் பேசட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கு அவன், ‘இல்ல, இது செட் ஆகாது… நான் அவளைக் கல்யாணம் பண்ணியே தீருவேன்’ அப்படின்னு சொல்லி இன்னைக்குக் கோவிலுக்கு வர பிளான் பண்ணான். உங்க ரெண்டு பேர் கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சிருச்சு. உன்னோட சம்மதம் இல்லாம நாங்க இப்படிச் செஞ்சது மிகப்பெரிய தப்புதான், அதுக்கு நீ என்ன தண்டனை வேணும்னாலும் கொடுக்கலாம். ஆனா ஒன்னு, என் பையன் நல்லவன், அவன் உன்னை விரும்பித்தான் கல்யாணம் பண்ணியிருக்கான். உனக்கும் அவன் மேல இஷ்டம் இருக்குன்னு எங்களுக்குப் புரியற மாதிரி ஒருத்தர் சொன்னாரு. அந்த விஷயம் தெரிஞ்ச பிறகுதான் இதெல்லாம் நடந்தது. உன்னோட மனசுல இருக்குற காதலுக்கு மறுபடியும் கிடைச்ச ஒரு வாய்ப்பு இது. அதனால நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழணும்,” என்று விஜய்யின் தாயார் உட்பட அனைவரும் ஆளுக்கு ஒரு கருத்தைச் சொல்லி ஆசீர்வதித்தனர்.
தன்னுடைய காதல் இவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்று அவள் யோசிக்கும் பொழுது, “இதோ இந்தத் தம்பிதான் சொன்னான்” என்று சுனிலை அழைத்து வந்தனர்.
“சாரி அஞ்சலி! உன் மனசுல இந்தக் காதலை வச்சுக்கிட்டு இத்தனை வருஷம் நீ கஷ்டப்பட்டதை என்னால பார்க்க முடியல. அதனால்தான் இவங்ககிட்ட உண்மையைச் சொன்னேன். விஜய் சார் நேத்து என்னை மீட் பண்ணாரு. நீ இவங்களை விட்டுட்டுத் தனியாப் போற பிளான்ல இருக்கும்போது, அதுவும் இவர்கிட்டச் சொல்லாமப் போறது எனக்குச் சுத்தமாப் பிடிக்கல. அதனால்தான் இவங்ககிட்ட காண்டாக்ட் பண்ணி எல்லாத்தையும் சொன்னேன். அதனால்தான் எல்லாரும் கல்யாண ஏற்பாடு பண்ணாங்க. ஒரு பொண்ணு தனியா இந்த உலகத்துல வாழ்றது ரொம்பக் கஷ்டம். நமக்குத் துணையாத் தாங்கிப் பிடிக்க ஒரு குடும்பம் இருக்கும் பொழுது, எப்பவுமே நாம தனிமையை விரும்பக் கூடாது. உன்னைக் கேட்காம இப்படிச் செஞ்சதுக்கு ஐ ஆம் வெரி சாரி (I am very sorry),” என்று சொல்லி அவளுக்குத் திருமண வாழ்த்துக்களைக் கூறிவிட்டு சுனில் அங்கிருந்து சென்றான்.
அஞ்சலி எதுவும் பேசவில்லை. அமைதியாகத் தலைகுனிந்து நின்றாள். “கணவன் மனைவி பார்த்துக் கொள்வார்கள்” என்று அவள் மனதை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் பெரியவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர். விஜய் சொன்ன வார்த்தையை அவர்கள் நம்பினார்கள். ஆனால், விஜய் எந்த நோக்கத்திற்காக இதைச் செய்தான் என்று யாரும் பெரிதாக யோசிக்கவில்லை. இத்தனை வருடம் கழித்து அவன் திருமணம் செய்து கொள்வதே பெரிய விஷயம் என்று அவசர அவசரமாக இதை நடத்தி முடித்தார்கள். பிற்காலத்தில் அது எவ்வளவு பெரிய தவறு என்று அனைவரும் உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
“நம்ம வீட்டுக்கு வரலாமா?” என்று கனத்த குரலில் அவன் கேட்க, கண்கள் சிவக்க அழுத முகத்தோடு அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வை ‘ஏன் இப்படிச் செய்தாய்?’ என்று கேட்பது போல் இருந்தது. ஆனால் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல், அவள் கைகளை அவன் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். எங்கே தன்னை விட்டுச் செல்வாளோ என்ற பயம் அவனுள் இருந்தது. இருவரும் தனி காரில் பயணித்து வீட்டிற்கு வந்தனர். அவர்களுக்கு ஆர்த்தி சுற்றப்பட்டு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அறைக்குள் வந்தவுடன் அஞ்சலி, “எதுக்கு இப்படிப் பண்றீங்க? ஏன் இப்படிச் செஞ்சீங்க?” என்று இரண்டே கேள்விகளை மட்டும் கேட்டாள்.
“எனக்கு உன்னைப் பார்த்த உடனே பிடிச்சுப் போச்சு. அதுவும் நீயும் என்னை விரும்புறதை தெரிஞ்ச பிறகு என்னால சும்மா இருக்க முடியல. ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கிற இதயங்கள் சேருவதில் தப்பில்லை. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு அஞ்சலி. இதுக்கு மேல என்னால எதுவும் சொல்ல முடியல. உன்னை அவாய்ட் (Avoid) பண்ணத்தான் உன்கிட்டச் சண்டை பிடிச்சேன். ஆனா உன்கிட்டச் சண்டை போட்ட ஒவ்வொரு நிமிஷமும், ‘ஏன் உன்கிட்ட அப்படி நடந்துகிட்டேன்?’ அப்படின்னு எனக்குள்ளேயே கேட்டுக்குவேன். ஏற்கனவே கல்யாணம் ஆனவனை உன்னால நேசிக்க முடியாதுன்னு நினைச்சேன். ஆனா உன்னோட இதயத்துல இடம் பிடித்தது நான் என்று தெரிஞ்ச பிறகு சும்மா இருக்க சொல்றியா? அதுவும் நீ ஒரேடியா எனக்குப் பயந்து ஒதுங்கிப் போறது எனக்குப் பிடிக்கல. நீ நம்ம குடும்பத்துல ஒருத்தி, இப்போ நீ என் பொண்டாட்டி,” என்று அவளது கன்னத்தில் கை வைத்து அழுத்தமாகச் சொன்னான்.
அந்த வார்த்தைகள் அஞ்சலிக்கு ஒரு தைரியத்தைக் கொடுத்தன. “நம்ம நேசித்தவன் நம்மையும் நேசிக்கிறான்” என்று தெரிந்த பிறகு அனைத்தையும் மறந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அவனும் அவளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். தன் வினுஷாவை இவளிடம் பார்ப்பதை உணர்ந்தவன், இவளை விட்டுவிடக்கூடாது என்று எண்ணினான். அந்தச் சுயநலம்தான் இப்போது அவளைத் திருமணம் செய்யத் தூண்டியது. ‘கொஞ்சம் கொஞ்சமாக இவளோடு நாம் இணைய முடியுமா என்று பார்க்கலாம்’ என்று விதியை நம்பி அவளுடன் இணைந்தான்.
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. என்னோட காதல் ரொம்பத் தப்பான சமயத்துல வந்துடுச்சு. மனசு அறிஞ்ச ஒரு காதல் தாமதமா வர்றதால, அதுக்கு வேற பெயர் கூட இந்த உலகத்துல இருக்கு. உங்களை நான் முதன்முதலில் சந்திக்கும் போதே எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்புறம்தான் தெரிஞ்சது நீங்க ஏற்கனவே கல்யாணம் ஆனவர்னு. ஆனா உங்க கண்ணு முன்னாடி உங்க மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்துட்டு நிக்கும்போது, ஆதரவா உங்க கையைப் பிடிக்க ஆசைப்பட்டேன். ஆனா அப்போ எனக்குச் சரியான வயது கிடையாது. இத்தனை வருஷம் கழித்து உங்களைச் சந்திப்பேன், உங்களுக்கே மனைவியாவேன் என்று நினைச்சுக்கூடப் பார்க்கல. விஜய்… ஐயோ சாரி, என்னங்க…” என்று சொல்லி வெட்கத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அவளைப் பின்னாலிருந்து கட்டிக்கொண்டவன், “உனக்கு எப்படித் தோணுதோ அப்படியே கூப்பிடு, எனக்கு அதுதான் பிடிக்கும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கீழ வா. இப்ப எனக்கு அவசரமா ஒரு மீட்டிங் இருக்கு, கண்டிப்பா ஆபீஸ் போய் ஆகணும்,” என்று கண்களைச் சுருக்கி அவளிடம் கெஞ்சிக் கேட்பது போல் கேட்டான். அவள் சிரித்துக் கொண்டே “போய் வாருங்கள்” என்று சொன்னாள். அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அவன் அலுவலகத்திற்குப் புறப்பட்டான். அஞ்சலிக்கு இது ஒரு புதிய உணர்வைக் கொடுத்தது. புதிதாகத் திருமணமானவர்களின் ஜொலிப்பு இப்படித்தான் இருக்கும் என்று அவளுக்கு அப்போதுதான் தெரிந்தது.
அவன் சென்ற பிறகு சிறிது நேரம் கழித்து உடை மாற்றிக்கொண்டு கீழே வந்தாள். அங்கு இருப்பவர்களிடம் சாதாரணமாகப் பேசிப் பழகினாள். மதிய உணவு அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டனர். மதியத்திற்குப் பிறகு அஞ்சலி அடிக்கடி வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். விஜய்யின் வருகைக்காக அவள் காத்திருப்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். இருவருக்கும் விருப்பம்தானே என்று கருதி, பெரியவர்கள் மற்ற சடங்குகளுக்காக விஜய்யின் அறையைச் சுத்தம் செய்து, முதலிரவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தனர்.
அஞ்சலிக்கு அலங்காரம் எல்லாம் செய்து முடித்தனர். பல அறிவுரைகளைச் சொன்னாலும், இனியன் மனதில் மட்டும் ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. வினுஷா மீது உயிரையே வைத்திருப்பவன், திடீரென்று எனக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது, திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்வதையெல்லாம் அவனால் நம்ப முடியவில்லை. அனைவரும் சென்ற பிறகு தனிமையில் இருந்த அஞ்சலியிடம் இனியன் கேட்டான்:
“உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்கா? நீ விஜய்யை விரும்புறதா சொல்றாங்க, அது உண்மையா?”
“ஆமாம், எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். ஆனா அப்போ அவர் கல்யாணம் பண்ணி மனைவியை இழந்தவர், எனக்கும் சரியான வயது கிடையாது. அவரைப் பார்க்கிறதுக்காகத்தான் இந்த வீட்டுக்கு வருவேன். அவர் போட்டோ எங்கே இருக்கும்னு பார்த்துட்டுப் போக ஆசைப்படுவேன். அப்புறம் அவர் இங்க வரும்போது தூரத்திலிருந்து அவரைப் பார்த்துட்டு ரசிக்கணும்னு நினைச்சேன். ஆனா என்னையும் அறியாம என் மனசுல இருக்குற காதல் வெளியே வந்தா அசிங்கமாகிடும்னு பயந்து ஒதுங்கிப் போகலாம்னு பார்த்தேன். ஆனா அவருக்கும் என்னைப் பிடிச்சிருக்கு. எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்பவே பிடிச்சுப் போச்சு. வாழ்க்கையில இனி எங்களுக்குள்ள சந்தோஷம், நிம்மதி, அன்பு, காதல் எல்லாம் இருக்கப்போகுது. அவர் முழுசா என்னை நேசிப்பதா சொல்லியிருக்காரு. நிச்சயம் நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்வோம். ஒரு அண்ணனா நீங்க எனக்கு ஆசீர்வாதம் பண்ணனும்,” என்று மழலை முகத்தோடு மகிழ்ச்சியாகச் சொன்னாள்.
இவளிடம் “ஜாக்கிரதையாக இரு” என்று சொன்னால் வருத்தப்படுவாள் என்று எண்ணிய இனியன், அமைதியாக அவள் தலையை வருடிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். சிறிது நேரத்தில் விஜய் வீடு வந்து சேர்ந்தான்.
அனைவரும் தங்கள் அறைக்குச் சென்றுவிட்டனர். “இரவு கணவனுக்கு நீயே பரிமாறு, இருவரும் ஒன்றாக உண்டு உங்கள் அறைக்குச் சென்று வாழ்க்கையைத் தொடங்குங்கள்” என்று சொல்லிவிட்டுப் பெரியவர்கள் சென்றனர். அஞ்சலி கணவனின் கார் சத்தம் கேட்டு, அலங்காரத்தோடு வாசலில் அவனுக்காகக் காத்திருந்தாள்.
ஆனால், அவன் வந்து நின்ற கோலத்தைப் பார்த்து அவள் மனம் மிகவும் வேதனையடைந்தது.