Home ANTIHERO17) பார்வை 😍

17) பார்வை 😍

by sreejanovels
7 views

அத்தியாயம் 17

நாட்கள் அதன் போக்கில் சென்றன. எப்பொழுது வருவான் என்று காத்துக் கொண்டிருந்த குடும்பத்தார்களுக்கு விஜய்யின் தரிசனம் அடிக்கடி கிடைத்தது. மேலும், வார இறுதி நாட்களில் தங்கிவிட்டுச் செல்கிறான்; அது என்ன மாய மந்திரமோ என்று அனைவரும் குழம்பிக் கொண்டிருக்க, அந்த மாய மந்திரத்திற்குக் கீதாஞ்சலி என்கிற மோகினி தான் காரணம் என்று யாரும் அறியவில்லை. ஏனோ அவளைத் தன்னுடைய மனைவி வினுஷாவாகவே அவன் பார்த்தான். வினுஷாதான் இவளுக்குள் இருக்கிறாள் என்று கண்மூடித்தனமாக நம்பினான். அஞ்சலி செய்யும் ஒரு சில விஷயங்கள் வினுஷாவைப் போலவே இருக்க, அவளையே பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு வழக்கமானது.

தூரத்திலிருந்து இந்த பெண்ணை ரசிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்குச் சோதனையாக வந்தது ‘காதல்’ என்கிற பேய்.

ஒரு நாள் வீட்டில் பண்டிகை விசேஷம் என்பதால், தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நண்பர்களை அழைத்து வந்திருந்தாள் கீதாஞ்சலி. அதில் சுனில் என்பவனோடு அவள் மிகவும் நெருக்கமாக இருப்பதைப் பார்க்கப் பொறுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் விஜய். அன்று அனைவரும் பூஜையில் கவனம் வைத்திருக்க, இங்கே கீதாஞ்சலியும் சுனிலும் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருப்பதை அவன் கோபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நாம் இங்கே இருக்கிறோம்; நம்மைப் பார்க்காமல் அவனோடவே பேசிக் கொண்டிருக்கிறாள். மற்ற தோழிகள்தான் இருக்கிறார்களே, அவர்கள் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள்; ஆனால் இவள் மட்டும் ஏன் இவனோடு இவ்வளவு நெருக்கமாக இருக்கிறாள்?” என்று அவனுக்குத் தன்னை அறியாமல் கோபம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. உண்மையில் இருவரும் சாதாரண நண்பர்களாகச் சிரித்துக் கொண்டுதான் பேசினார்கள். ஆனால் விஜய்க்கு ஏன் அப்படித் தோன்றியது என்று தெரியவில்லை. அன்று இரவு பூஜை எல்லாம் முடிந்த பிறகு, மறுநாள் காலை இங்கிருந்து கல்லூரிக்குச் செல்வதாக அஞ்சலி சொல்லி இருந்தாள். அவள் இரவு உணவு முடித்துவிட்டுத் தன் அறைக்குள் செல்ல…

பால்கனியில் யாரோ இருப்பது போல் தோன்ற, யார் என்று பார்த்தால் அங்கே விஜய் தான் நின்று கொண்டிருந்தான். அதுவும் மிகக் கோபமாக! அவனைப் பார்த்துச் சாதாரணமாக, “என்ன நீங்க இங்க இருக்கீங்க?” என்று கேட்க,

“யார் அவன்? ரொம்பச் சிரிச்சுச் சிரிச்சுப் பேசிக்கிட்டு இருக்க… லவ் பண்றியா? எத்தனை வருஷமா லவ் பண்ற? படிக்கிற வயசுல இது ஒரு குறைச்சல்! போனாப் போகட்டும்னு உன்னைப் பார்த்துக்கிட்டு, உன்னைப் படிக்க வைச்சுக்கிட்டு இருந்தா, நீ காதல் பண்ணி உலகத்தை மறந்து இருக்க! வீட்டுல பூஜை நடந்து கொண்டிருக்கும் போது உன் கூட வந்த பொண்ணுங்க எல்லாரும் அமைதியா இருக்காங்க; ஆனா நீ அந்தப் பையன் கிட்ட மட்டும் அவ்வளவு க்ளோஸாச் சிரிச்சுச் சிரிச்சுப் பேசிக்கிட்டு இருந்தீங்களே? அதுவும் அவன் ஏதோ சைகை சொல்றான், நீ வேண்டாம்னு பயப்படுற… என்ன, உங்க லவ் மேட்டரை வீட்டுல சொல்றதுக்காகப் பிரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா? இப்ப எப்படி எங்க செலவில் உங்க கல்யாணத்தை முடிக்கணும், அதானே உன்னோட பிளான்?” என்று பட்டாசாக வெடித்தான்.

அதிர்ச்சியில் அஞ்சலி வாயில் கை வைத்துக் கொண்டாள். “என்ன இவன் இப்படிப் பேசுகிறான்?” என்று திகைத்தாள்.

“என்ன, ஒன்னும் தெரியாத மாதிரி டிராமா போடுறியா? சொல்லு, அவனை லவ் பண்ற தானே? இப்ப என்ன அவனைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும், அதான் உன்னோட பிளான்!” என்று ஆக்ரோஷமாகக் கேட்க, அஞ்சலி கொஞ்சம் தன்னைச் சமாதானம் செய்து கொண்டு பேசினாள்.

“காலங்கள் மாறுது. நீங்க கூடக் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணீங்க. ஆனா ஒரு பொண்ணும் பையனும் பேசுறது காதல் விவகாரமா இல்ல சாதாரண விவகாரமான்னு நோட் பண்ணக் கூட உங்களுக்குத் தெரியல. நீங்க எல்லாம் எப்படித் தான் காதலிச்சு கல்யாணம் பண்ணீங்களோ? சுனில் யார் என்று உங்களுக்குத் தெரியாதா? அவன் எங்க அம்மாவோட அக்கா பையன். அவங்க சென்னையில செட்டில் ஆகி இருக்காங்க. அவன் எனக்குத் தம்பி, என்னை விட மூணு மாசம் சின்னப் பையன். ஆனா நாங்க ரெண்டு பேரும் க்ளோஸ். நான் ஃபுல்லா ஆந்திராவில இருந்தேன், அதனால டச் விட்டுப் போன பந்தம் இங்க வந்த பிறகுதான் தொடருது. ஆனா பெரியம்மா, பெரியப்பாவுக்கு என்னைப் பிடிக்காது; காரணம், எங்க அம்மா அவங்க சொல்பேச்சைக் கேட்காம எங்க அப்பாவை ஓடிப்போய்க் கல்யாணம் பண்ணதுதான். அதனால அவங்களுக்குப் பிறந்த என்னையும் அவங்க வெறுத்து ஒதுக்குவாங்க. ஆனா சுனில் அப்படி கிடையாது, ரொம்ப க்ளோஸ். நாங்க நார்மலாகத் தான் பேசிக்கிட்டு இருப்போம். அவன் அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்து இருக்கான், எல்லாருக்கும் அவனைத் தெரியும். நாங்க எப்பவுமே சீரியஸான விஷயத்தைக் கூடச் சிரிச்சுக்கிட்டே பேசுவோம். நீங்க அதைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க. அதுமட்டும் இல்லாம, நீங்க பூஜை வேலையைக் கவனிக்காம என்னை எதுக்குப் பார்த்துட்டு இருக்கீங்க?” என்று எதிர் கேள்வி கேட்டாள்.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. எனக்கு எதிரில் நீங்க இருந்தீங்க, அதுவும் ரொம்ப க்ளோஸா இருந்தீங்களா, அதனால தான் அப்படிக் கேட்டேன். வேற ஒன்னும் இல்ல… அப்போ அவன் உனக்குத் தம்பி, வேற எதுவும் இல்ல இல்ல?” என்று மீண்டும் மீண்டும் கேட்டான்.

“அட யாருப்பா இவரு? இதுக்குத் தான் இந்த 90ஸ் கிட்ஸ் பசங்களை யாருக்குமே பிடிக்க மாட்டேங்குது. பேருக்குத் தான் 90ஸ் கிட்ஸ், நாங்க ரொம்பப் பாவம் அப்படின்னு பேசுறீங்க. ஆனா மனசுக்குள்ள எப்பவுமே சந்தேகம்! இப்படி இருந்தா எந்தப் பொண்ணும் மடங்காது. பாவம், உங்க மனைவி உங்க தொல்லை தாங்க முடியாமத்தான் இந்த உலகத்தை விட்டுப் போயிட்டாங்க…” என்று அவள் சொல்வதற்குள், அவன் கரங்கள் அவள் கழுத்தை நெரிக்கத் தொடங்கினன.

அஞ்சலிக்கு உயிர் பிதுங்கி வெளியே வந்துவிடும் போல இருந்தது. அவள் கழுத்தை அழுத்தப் பிடித்துக் கொண்டு அவன் கத்தினான்:

“உங்க அப்பாவால தான் நான் இப்படித் தனி மரமா நின்னுகிட்டு இருக்கேன். ஆனா நீ என்னைப் பார்த்து இப்படிப் பேசிக்கிட்டு இருக்க? இன்னொரு முறை என்னுடைய பர்சனல் லைஃப் பத்தி வாயைத் திறந்தே, போனாப் போகட்டும் சின்னப் பொண்ணுன்னு விடமாட்டேன், கழுத்தை நெரித்துக் கொன்று விடுவேன்! இருக்கிறது ஓசியில, இதுல என்னையே பேச்சு வேற… பாரு!” என்று புண்படுத்தும் வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான்.

அஞ்சலிக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இன்னும் எத்தனை நாட்கள் தான் இந்த வார்த்தையைக் கேட்பது? “மிகப்பெரிய செல்வந்தர் வீட்டில் அடைக்கலத்தில் வளர்கிறாய், உனக்கு எல்லாச் சொகுசும் இருக்கும், போனாப் போகட்டும் என்று இலவசமாகக் கொடுப்பார்கள், பெற வேண்டியதைப் பெற்றுக் கொண்டுதான் இவளுக்கு அனைத்தும் செய்கிறார்கள்” என்று அவளை அவதூறாகப் பேசியது அவளுக்கு நினைவுக்கு வந்தது. இப்படிப் பலமுறை கேட்டு வெறுத்துப் போனவள், இதையே விஜய் வாயால் கேட்டது மிகவும் வேதனையாக இருந்தது. நெஞ்சைத் தடவிக் கொண்டு அப்படியே அமர்ந்தாள்; கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு வலி எடுக்க ஆரம்பித்தது. சற்று நேரத்தில், “ஐயோ… அம்மா…” என்று கத்த ஆரம்பித்தாள்.

சத்தம் கேட்டுப் பதறி அடித்துக் கொண்டு அனைவரும் உள்ளே சென்று பார்த்த போது, அஞ்சலி அழுது கொண்டிருந்தாள்.

“ஐயோ அஞ்சலி அக்கா, என்ன ஆச்சு?” என்று குழந்தைகள் எல்லாரும் அழ ஆரம்பித்து விட்டார்கள்.

அப்பொழுது இசை ஏதோ ஞாபகம் வந்தவளாக, “சாப்பிட்டு முடித்து இந்நேரம் மாத்திரை போட்டிருக்க வேண்டுமே?” என்று அஞ்சலியிடம் மாத்திரை பற்றிக் கேட்க, அதைப்போடத் தாமதமாகிவிட்டது என்று அஞ்சலி சொன்னாள். அவளைத் திட்டி மாத்திரை போடச் சொல்ல, அதைப் போட்ட பிறகுதான் அவளுக்கு நிம்மதி வந்தது.

“என்னதான் எட்டு வருஷம் ஆனாலும், இன்னும் உனக்கு ஏதாவது டென்ஷன் அல்லது கஷ்டம் இருக்கும்போதெல்லாம் வலி வரும்னு சொன்னாங்க இல்லையா? அதுக்காகத் தான் இன்னும் மாத்திரை சாப்பிட்டுக்கிட்டு இருக்க. இன்னும் ஒரு வருஷம் தான்; முழுசா இந்த மாத்திரை சாப்பிட்டு முடிச்ச பிறகு உனக்குக் கிளியர் ஆகிடும். அதுக்கப்புறம் என்ன வேணாலும் பண்ணிக்கோ. இப்ப எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும்? உன்னை யாராவது கஷ்டப் படுத்துற மாதிரி பேசினார்களா?” என்று விஜய்யின் அம்மா ராதா சந்தேகமாகக் கேட்டார்.

அவள் இல்லை என்று தலையாட்டி, “எனக்கு என் அம்மா ஞாபகம் வந்தது. பெற்ற மகளைக் கூட வெறுத்துப் போய் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லையே என்ற வேதனை சூழ்ந்து கொண்டது” என்று சொன்னாள். “அம்மா ஞாபகம் வந்துவிட்டது போல” என்று அனைவரும் அவளுக்கு ஆறுதலாக நாலு வார்த்தை பேசிவிட்டுச் சென்றனர்.

அனைவரும் சென்ற பிறகு விஜய் அந்த அறைக்குள் வந்தான். அவனைப் பார்த்து அஞ்சலி பயத்தில் எழுந்து நின்றாள்.

“இல்ல இல்ல, பரவாயில்லை… சாரி, நான் இப்படிப் பேசி இருக்கக் கூடாது. உன்னோட மனசு கஷ்டப்படுற மாதிரி நடந்துக்கிட்டதுக்கு மன்னிப்பு கேட்கிறேன். பிகாஸ், உன்னோட இதயமா இருக்கிறது என்னோட வினு! நீ அவளைப் பத்திப் பேசினதால்தான் உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டேன். இனி உன்னைக் கஷ்டப்படுத்திக்காதே. என்னோட வினு உன்னோட இதயமாத் துடிச்சுக்கிட்டு இருக்கா, அவளைப் பத்திரமாப் பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

அஞ்சலிக்கு வெறுப்பு தான் வந்தது. “இப்போது எல்லாரும் தன்னைப்பார்த்துக் கொள்ளக் காரணம் வினுவின் இதயம் தன்னோடு இருப்பதால்தான்” என்று அவளுக்கே தோன்றியது.

அவளுக்கு விஜய் மீது இப்பொழுதல்ல, சிறு வயதிலிருந்தே காதல். அவனுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்று நினைத்த போது தன்னைக்காப்பாற்றியவனை ஹீரோவாகப் பார்த்தாள். ஆனால் அவனுக்கு ஒரு மனைவி இருப்பதும், அவள் கர்ப்பமாக இருக்கும் போது தன்னைக் காப்பாற்றப்போய் அந்தப் பெண்ணும் குழந்தையும் இறந்து போனதும் தெரிந்த பிறகு அவளுக்குத் தன் காதல் மீது வெறுப்பு வந்தது. “ஏற்கனவே கல்யாணமானவரை நேசித்து இருக்கிறோம்” என்ற குற்ற உணர்வு ஒரு பக்கம்; போதாக்குறைக்குச் சாவின் விளிம்பு வரை போய் வந்தவளுக்கு, அவர் நேசித்த வினுவின் இதயம் தனக்குள் இருப்பது இன்னும் கோபத்தைக் கொடுத்தது. “நான் விலகிச் செல்லப் பார்த்தாலும் அவரை நேசிக்க வைப்பதற்காகவே இறைவன் தனக்கு இப்படிச் செய்கிறான்” என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள்.

அவன் வெளிநாட்டில் இருந்த வரை அவளுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் அவனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று தானே அவ்வப்போது அவன் வீட்டிற்கு வந்து புகைப்படம் பார்த்துவிட்டுச் செல்வாள். நான்கு வருடம் அவர்கள் வீட்டில் இருந்ததற்கே ஊரில் அவளுக்கு ஏகப்பட்ட பட்டப் பெயர்கள்! சரி என்று ஹாஸ்டலில் சேர்ந்த பிறகு வார இறுதிக்கு மட்டும் அங்கு வந்து செல்வாள். திடீரென்று விஜய் அவள் முன்பாக வந்து அவளை இன்னும் கிரங்கடிப்பான் என்று அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அவன் கேட்கும் கேள்விகளுக்குக் குறும்பாகப் பதில் சொல்ல, அது வினையில் போய் முடிந்தது. இதையெல்லாம் நினைத்துப் பார்த்த அஞ்சலிக்குக் கவலையாக இருந்தது.

“சீக்கிரம் இவங்க கிட்ட இருந்து ஒதுங்கிப் போகணும்” என்று முடிவு செய்தாள். ஆனால் விமலின் அதிகபட்ச கோபமும் காதலும் அவளை இன்னும் இந்த குடும்பத்தோடு வலுவான பந்தத்தில் இணைய வைக்கப் போவது அவளுக்குத் தெரியாது… விதி தன் விளையாட்டைத் தொடங்கியது.

You may also like

Leave a Comment

About Me

Featured