Home ANTIHERO18) பார்வை 😍

18) பார்வை 😍

by sreejanovels
12 views

அத்தியாயம் 18

அன்றைய சம்பவத்திற்குப் பிறகு, அஞ்சலி அவ்வப்போது அந்த வீட்டிற்கு வருவதைத் தவிர்த்தாள். ஏதாவது வார இறுதி நாட்கள் (Weekend) வந்தால் கூட, குழந்தைகளைத் தனியாக வெளியே அழைத்துச் சென்று அவர்களை வீட்டில் விட்டுவிட்டு, நாலு வார்த்தை பேசி முடித்துவிட்டு ஹாஸ்டலுக்குச் சென்றுவிடுகிறாள். ஏன் என்று அவளிடம் கேட்பதற்கே அனைவருக்கும் தர்மசங்கடமாக இருந்தது.

இப்போது அவள் வளர்ந்துவிட்டாள், அடிக்கடி இன்னொரு வீட்டிற்கு வருவது அவளுக்குச் சங்கடத்தைக் கொடுக்கும் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக அவள் விலகப் பார்க்கிறாள் என்று அனைவரும் நினைத்தனர். என்னதான் இருந்தாலும் நாம் அவள் குடும்பம் என்று அவ்வப்போது சொல்லிக்கொள்ள வேண்டும் என்று கருதி, அவளைத் தங்கள் வீட்டுப் பெண்ணாகவே அனைவரும் நடத்தினர். அவளும் தன் இருப்பு நிலையை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி இருந்தாள். அப்படி இருக்கும் பொழுது, முதலாம் ஆண்டு எம்பிஏ (MBA) கடைசிப் பரீட்சை முடிந்துவிட்டு, ஒன்றரை மாத விடுமுறைக்கு வீட்டிற்கு வருவதாக அஞ்சலி சொல்லி இருந்தாள்.

இதை எப்படியோ ரகசிய உளவாளி மூலம் கேட்டுக்கொண்ட விஜய், தன் பெட்டிப் படுக்கையோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தான். என்றும் இல்லாத அதிசயமாய் மகன் தங்களோடு வந்து தங்குவதை நினைத்துப் பெற்றவர்களும் உற்ற உறவினர்களும் சந்தோஷமடைந்தனர். அதே சமயம், விடுமுறைக்காகத் தனது பெட்டியோடு அஞ்சலியும் அந்த வீட்டிற்கு வந்தாள். எல்லாரிடமும் நன்றாகப் பேசும் அஞ்சலி, விஜய்யிடம் மட்டும் எதுவும் பேசவில்லை. இவன் யாரிடமும் அதிகம் பழகாதவன், அதனால் பேச மாட்டான் என்று மற்றவர்கள் நினைத்திருக்க, விஜய்க்கோ கோபம் தான் வந்தது. அனைவரிடமும் மகிழ்ச்சியாகப் பேசும் இவள், தன்னிடம் மட்டும் ஒதுக்கம் காண்பிப்பது அவனுக்கு ஏதோ போல் தோன்றியது.

மேலும், அவளுக்கு நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி போல! ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் மிகப்பெரிய பெட்ஷீட் ஒன்று போட்டு, அனைவரும் கும்பலாக அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர். நடுவில் அஞ்சலி அனைவரிடமும் ஏதோ மிமிக்ரி (Mimicry) செய்து காட்டிக் கொண்டிருக்க, எல்லோரும் கைதட்டிச் சிரித்துச் சந்தோஷமாக இருந்தனர். அங்கே விஜய் அவளுக்கு எதிராக வந்து நின்றான்.

அவன் எதிரே வந்தவுடன் தன் பேச்சை நிறுத்திக் கொண்டவள், கூச்சத்தில் நெளிந்தாள்.

“ஏன் நிறுத்திட்ட? நல்லாப் பேசுற, உன்னோட வாய்ஸ் நல்லா இருக்கு. நானும் கேட்கத்தான் வந்தேன்” என்று சொல்லிவிட்டுத் தன் குடும்பத்தோடு அவன் அமர்ந்து கொள்ள, விஜய் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. பிறகு அனைவரும் அஞ்சலியைப் பார்க்க, அவள் முதலில் சற்று கூச்சப்பட்டாலும், போகப் போக மீண்டும் பழைய நிலைக்கு வந்து கலகலப்பானாள். அவள் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் அனைவரும் வயிறு வலிக்கச் சிரித்துக் கொண்டாடினர். ஒன்றரை மாதம் தங்களோடு அவள் இருப்பதே அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.

என்னதான் அஞ்சலி அனைவரிடமும் சந்தோஷமாக இருந்தாலும், ஒருவித ஒதுக்கத்தைக் காட்டுவது விஜய்க்கு நன்றாகத் தெரிந்தது. குடும்பமாக எல்லாரும் சாப்பிடும் பொழுது, “நான் அப்புறம் சாப்பிட்டுக்கொள்கிறேன்” என்று சொல்லித் தனியாகச் சாப்பிடுவது, அடிக்கடி தனது நண்பன் சுனிலிடம் எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருப்பது என அவள் விலகி இருப்பதை அவன் கவனித்துக் கொண்டே இருந்தான்.

இதற்கிடையில், எதிர்பாராத விதமாக விஜயவாடாவில் இருக்கும் ஒரு சிறு ஹோட்டல் நிறுவனத்தின் திறப்பு விழாவுக்கு விஜய்யை அழைத்திருந்தனர். தவிர்க்க முடியாத காரணத்தால் அங்கே செல்வதற்காகத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தான். தான் இங்கிருந்து கிளம்பும்போது அஞ்சலி மனதில் ஏதாவது சலனம் ஏற்பட்டிருக்குமா என்று அவன் சுயநலமாக யோசித்தான். ஆனால் இவனைப் பற்றிக் கவலை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாத அஞ்சலி அமைதியாகவே இருந்தாள். அங்கு சென்ற பிறகு விஜய்க்கு எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தது.

தன் மனைவி வினுஷா இறந்ததற்குக் காரணமான அந்த ஸ்ரீனிவாசன், தங்கள் குடும்பத்தில் தலையெடுக்காமல் இருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது என்று அவன் நினைத்தான். மேலும், அவன் பெற்ற மகள்தானே அஞ்சலி; பெற்ற தந்தை இப்படி இருக்கிறாரே என்று அவனுக்குக் கோபம் வந்தது. ஸ்ரீனிவாசனின் மனைவி இப்போது ஏதோ ஓர் ஆசிரமத்தில் வேலை செய்வதாகத் தகவல் கிடைத்தது. ஸ்ரீனிவாசன் எந்த நிலையில் இருக்கிறார் என்று பார்த்தால், அவர் அங்கே ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார், பைனான்ஸ் நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கிறார், தனியாகப் பக்கத்தில் ஒரு கடையும் வைத்திருக்கிறார். மேலும், வேறொரு திருமணம் செய்துகொண்டு, இந்த வயதில் ஒரு ஐந்து வயதுக் குழந்தைக்குத் தகப்பனாக இருக்கிறார்.

விஜய்யைப் பார்த்தவுடன் ஸ்ரீனிவாசனுக்குச் சற்று பயம் வந்தாலும், “தான் இப்போது பழையபடி இல்லையே, நமக்கென்று ஒரு புதிய குடும்பம் இருக்கிறதே” என்ற திமிரோடவே அவனிடம் பேசினார். அவரைப் பார்த்தவுடன் விஜய்க்குப் பழைய நினைவுகள் எல்லாம் வந்தன. திறப்பு விழா முடிந்தவுடன் அவசர அவசரமாகச் சென்னைக்கு வந்தவன், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தான். அன்று ஒரு நாள் பால்கனியில் அஞ்சலி சுனிலிடம் பேசிக் கொண்டிருப்பதை எதேச்சையாகக் கேட்டான்.

“உன்னை நம்பித்தான் இருக்கேன், இப்படிப் பண்ணாதப்பா ப்ளீஸ்… எனக்காக இதுகூடப் பண்ண மாட்டியா? அவ்வளவுதானா நீ?” என்று அவள் ஒரு சாதாரண விஷயத்திற்காகக் காமெடியாகப் பேசிக் கொண்டிருக்க, அதை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்ட விஜய், பால்கனி வழியாக எகிறிக் குதித்தான். அஞ்சலிக்கு பயம் வந்துவிட்டது. உடனே போனை கட் செய்துவிட்டு, “என்ன இது?” என்பது போல் பார்த்தாள்.

“நைட் 11 மணிக்கு ஒரு ஆம்பளைப் பையன்கிட்ட என்னடி பேச்சு இருக்கு?” என்று அவன் அதட்டலாகக் கேட்டான்.

“உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? அவன் என்னோட தம்பி. நான் எங்க சித்திகிட்டப் பேச ஆசைப்படுறேன், அதுக்காக அவன் ஹெல்ப் பண்றேன்னு சொன்னான். அதைப் பத்திப் பேசிட்டு இருந்தா உங்களுக்கு என்ன சார் வந்தது? இங்க பாருங்க, அடிக்கடி நீங்க என் மேல உரிமை எடுத்து ரொம்பக் கேள்வி எல்லாம் கேட்காதீங்க. உங்க குடும்பம் எனக்கு ஹெல்ப் பண்ணுது, அதுக்காக ராதா ஆன்ட்டி, இனிய செழியன் அண்ணா, மதன் அப்பா அவங்களுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கேன். ஆனா நீங்க யாரு? என் விஷயத்துல தலையிட உங்களுக்கு உரிமை இல்லை. இன்னொரு தடவை இந்த மாதிரி நடந்துச்சுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று அவனிடம் வெறுப்பாகப் பேசினாள்.

“என்னது, எனக்கு உரிமையில்லையா? என்னை விட யாருக்கும் அதிக அளவு உரிமை இல்லைடி! காரணம், என் பொண்டாட்டியோட இதயம்தான் இப்போ உன்னை உயிரோட வச்சிருக்கு. லப்டப் லப்டப்னு உனக்குள்ள துடிக்கிறது உன்னோட இதயம் கிடையாது, என்னோட வினுஷாவோட இதயம்! போனாப் போகட்டும்னு ஒரு சின்னப் பொண்ணு உயிர் பிழைக்க, என் மனைவி இதயத்தை மாற்றி உனக்குக் கொடுத்ததால்தான் இப்போ அந்த இதயத்தால் நீ உயிர் வாழ்ந்துட்டு இருக்க. அதை முதல்ல மறந்துடாத… நன்றி கெட்டவ வந்துட்டா பெருசாப் பேசறதுக்கு!” என்று சுருக்கென்று பேசினான்.

அதிர்ச்சியில் வார்த்தை வராத கீதாஞ்சலி, அவனைப் போட்டு அடித்துவிட்டு அழ ஆரம்பித்தாள்.

“நீங்க ஏன் என்கிட்ட இப்படி நடந்துக்கிறீங்க? உங்களுக்குச் சொன்னா புரியாது, தப்பானவங்களுக்கு எல்லாம் தப்பாதான் தெரியும். நீங்க என்ன வேணாலும் பேசுங்க… இப்ப என்ன, போனாப் போகட்டும்னு உங்க பொண்டாட்டி இதயத்தை எனக்குத் தானம் பண்ணிக் கொடுத்தீங்க, அவ்வளவுதானே? நாளைக்கு நான் செத்துப் போனா அந்த இதயத்தை நீங்களே கையில் வச்சு ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள்ள போட்டு வச்சுக்கோங்க! ஒரு தடவை உயிர் பிச்சை கொடுத்ததுக்கு ரொம்பத்தான் பேசுறீங்க. நான் ஒன்னும் சும்மா இந்த வீட்டுக்கு வந்துட்டுப் போகல; ஏதாவது வேலைன்னா பண்ணிட்டுப் போவேன். எல்லாரும் கேட்டுப் பாருங்க, எனக்கு ஹெல்ப் பண்ண காசுக்குத் தகுந்த மாதிரி நான் வேலையைச் செஞ்சுட்டுத் தான் அடுத்த வேலையைப் பார்ப்பேன். என்கிட்ட இந்த மாதிரிப் பேசுற வேலையை வச்சுக்காதீங்க. உங்களை நல்லவர்னு நினைச்சேன். சின்ன வயசுல உங்களைப் பார்க்கும்போது, இப்படி உயிராய் நேசிக்கிற ஒரு ஜீவன் என் வாழ்க்கையில வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். ஆனா இப்பதான் தெரியுது நீங்க ரொம்ப மோசமானவர்னு! எப்படி வாய் கூசாம மத்தவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி உங்களாலப் பேச முடியுதுன்னு எனக்குத் தெரியல. நம்ம சந்திப்பு இது கடைசி முறையா இருக்கணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். நீங்க எங்க அப்பா மேல இருக்குற கோபத்தை என் மேல எறிஞ்சு விழுற மாதிரிப் பேசினீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது. அவர் இப்போ இன்னொரு குடும்பத்தோட செட்டில் ஆயிட்டாரு. எங்க அம்மா ஏதோ ஒரு இடத்துல தனியா இருக்காங்க. ஆனா இந்த குடும்பம் எனக்கான நிறைய உதவிகளைச் செஞ்சிருக்கு. என்னோட படிப்பு முடிஞ்சவுடன் நான் எங்க அம்மாவைக் கூட்டிக்கிட்டு எங்கேயாவது போயிடுறேன். தயவு செஞ்சு என்னை இப்படி அவதூறா பேச வேண்டாம்” என்று முகத்தை மூடிக்கொண்டு அவன் எதிர்ப்பக்கமாகத் திரும்பி அழுது கொண்டிருந்தாள்.

விஜய்க்கு மிக வருத்தமாக இருந்தது.

தெரியாமல் செய்துவிட்டோம் என்று நினைத்தாலும், ஆண் என்ற அகம்பாவம் அவன் கண்ணை மறைத்துவிட்டது. ‘அவள் ஒரு பெண், ஒரு பொண்ணுன்னா நம்ம என்ன சொன்னாலும் கேட்கணும், ஆம்பளை நம்ம என்ன வேணாலும் பேசலாம், என்ன வேணாலும் செய்யலாம், ஆனா ஒரு பொண்ணு எதிர்த்துப் பேசுறது எப்பவுமே சரி கிடையாது’ என்று நினைக்கும் ஆண்களில் அவனும் ஒரு வகை.

அவன் சென்ற பிறகு கதவைச் சாத்திவிட்டுத் தன்னைச் சமாதானம் செய்து கொண்டவள், இன்னும் ஒரு மாதத்தை இங்கே எப்படிக் கடத்துவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். யாரிடமும் சொல்லாமல் வேறு ஹாஸ்டல் மாறிவிட்டு, தன்னைப்பற்றி எந்தத் தகவலும் அவர்களிடம் சொல்லக்கூடாது என்று சொல்லிவிடலாமா என்று யோசித்தாள். இத்தனை வருடம் தன்னைப் பாதுகாத்த குடும்பத்தைப் பிரிவது வேதனையாக இருந்தாலும், வீட்டில் நம்பகமான ஒரு நபரிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு விலகிச் சென்றுவிட வேண்டும் என்று அவள் முடிவெடுத்தாள்.

ஆனால், இன்னும் இரண்டு நாட்களில் அந்த வீட்டிற்குச் செல்ல மருமகளாக அவள் அடியெடுத்து வைக்கப் போகிறாள் என்பது அவளுக்கே தெரியாது…


You may also like

Leave a Comment

About Me

Featured